இந்தியா, பாகிஸ்தான் இடையே அணு ஆயுதப்போரை தடுத்து நிறுத்தினேன்; டிரம்ப் பெருமிதம்

1 day ago 2

வாஷிங்டன்,

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. இந்த ராணுவ நடவடிக்கையை தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே மோதல் ஏற்பட்டது. 3 நாட்கள் நடந்த மோதலின்போது இரு தரப்பிலும் ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் இரு தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டது. இதையடுத்து இரு தரப்பு பேச்சுவார்த்தைக்குப்பின் சண்டை முடிவுக்கு வந்தது.

அதேவேளை, இந்தியா, பாகிஸ்தான் பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தம் செய்ததாகவும், இரு நாடுகளுக்கு இடையேயான அணு ஆயுதப்போரை நிறுத்தி விட்டதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால், இரு தரப்பு பேச்சுவார்த்தையில் எந்த நாடும் தலையிடவில்லை என்று இந்தியா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியா, பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக நான் தான் காரணம் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் திட்டவட்டமாக கூறியுள்ளார். இது தொடர்பாக டிரம்ப் கூறுகையில், துப்பாக்கி தோட்டாக்களுக்கு பதிலாக வர்த்தகத்தை கொண்டு இந்தியா, பாகிஸ்தான் இடையேயான அணு ஆயுதப்போரை நிறுத்தியதில் நான் பெருமைபடுகிறேன்.

வழக்கமாக தோட்டாக்கள் மூலம் போர் நிறுத்தம் அமலுக்கு வரும் ஆனால் நான் வர்த்தகம் மூலம் போரை முடிவுக்கு கொண்டு வந்தேன். அதில் நான் பெருமைபடுகிறேன். இந்தியா, பாகிஸ்தான் இடையே அணு ஆயுதப்போர் ஏற்படும் சூழ்நிலை உருவானது. அதுபற்றி யாரும் பேசமாட்டார்கள். ஆனால் தற்போது இரு நாடுகளும் அமைதியாக சிறப்பாக செயல்படுகின்றன' என்றார்.

Read Entire Article