
சிட்னி,
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 20-ந் தேதி லீட்சில் தொடங்குகிறது. சமீபத்தில் ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதால், புதிய கேப்டனாக 25 வயதான சுப்மன் கில் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
கேப்டன்ஷிப்பில் போதிய அனுபவம் இல்லாத அவரது தலைமையில் இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் எப்படி விளையாடப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. அத்துடன் இது 4-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே இந்த தொடரில் வெற்றி பெற வாய்ப்புள்ள அணி குறித்து பல முன்னாள் வீரர்கள் தங்களது கணிப்பினை வெளியிட்டு வருகின்றனர். அந்த வரிசையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான மேத்யூ ஹெய்டன் இந்த தொடரில் இந்தியா வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாக கணித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் அவ்வளவு சிறந்தவர்கள் என்று நான் நினைக்கவில்லை, அவர்களிடம் நிறைய காயமடைந்த பவுலர்கள் உள்ளனர். மேலும் பல முன்னணி பந்துவீச்சாளர்கள் ஓய்வு பெற்று விட்டனர். அதுதான் இங்கிலாந்துக்கு சவாலாக இருக்கும். இங்கிலாந்தின் வடக்கு பகுதியில் நடைபெறும் போட்டிகளில் நிலவும் சூழ்நிலைகள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். அங்கு நடைபெறும் போட்டிகளை வெல்வது இந்த தொடரை இந்தியாவுக்கு சாதகமானதாக மாற்றும். எனவே இந்த தொடரில் இந்தியா வெற்றி பெறவே வாய்ப்புள்ளது" என்று கூறினார்.
அவர் கூறுவது போலவே இங்கிலாந்து அணியில் மார்க் வுட், ஆர்ச்சர் போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் காயத்தில் இருந்து மீளாமல் உள்ளனர். மேலும் ஆண்டர்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் போன்ற முன்னணி வீரர்கள் ஓய்வு பெற்று விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.