புதுடெல்லி: இந்தியா, அமெரிக்கா இடையே வரும் ஜூன் 25ம் தேதிக்குள் இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியாவின் இறக்குமதி பொருட்களுக்கு கூடுதலாக 26 சதவீத வரியை விதித்துள்ளார். இந்தியா பேச்சுவார்த்தை நடத்த முன்வந்ததை தொடர்ந்து இந்த பரஸ்பர வரி விதிப்பு வரும் ஜூலை 9ம் தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 26 சதவீத வரியிலிருந்து முழுமையாக விலக்கு பெற இந்திய வர்த்தக உயர் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்திய வர்த்தக துறையின் சிறப்பு செயலாளர் ராஜேஷ் அகர்வால் தலைமையிலான குழு கடந்த வாரம் வாஷிங்டன் சென்று 4 நாள் அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அதே போல, ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஸ் கோயலும் கடந்த வாரம் அமெரிக்கா சென்று அந்நாட்டு வர்த்தக அமைச்சர் ஹோவர்ட் லுட்னிக்கை சந்தித்து பேசினார். இந்த பேச்சுவார்த்தைகள் குறித்து உயர் அதிகாரிகள் கூறுகையில், ‘‘பேச்சுவார்த்தை சரியான பாதையில் செல்கிறது. வரும் ஜூன் 25ம் தேதிக்குள் இருதரப்பு இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தில் உடன்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது’’ என்றனர்.
The post இந்தியா-அமெரிக்கா இடையே ஜூன் 25க்குள் இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்பு appeared first on Dinakaran.