
புதுடெல்லி,
அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஆக்சியம் ஸ்பேஸ் என்னும் தனியார் நிறுவனத்தின் 'ஆக்சியம் -4' விண்வெளி பயணம் திட்டமிடப்பட்டு உள்ளது. பால்கன்-9 ராக்கெட் மூலம் ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலத்தில் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா மற்றும் 3 பேர் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்கின்றனர்.
இதற்கான பணிகள் முடிக்கப்பட்டு ராக்கெட் தயார் நிலையில் உள்ளது. இந்த ராக்கெட் கடந்த மாதம் 29-ந்தேதி விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டது. ஆனால் சில தொழில்நுட்ப பணிகளுக்காக ராக்கெட் ஏவுதலை கடந்த 8-ந்தேதிக்கு மாற்றி வைத்தனர். இந்தநிலையில் மோசமான வானிலை காரணமாக மீண்டும் தேதி மாற்றப்பட்டு கடந்த 10-ந்தேதி மாலை 5.52 மணிக்கு ஏவப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதற்கான நாள் நெருங்கி வந்தபோது, ராக்கெட் என்ஜினில் திரவ ஆக்சிஜன் கசிவு இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுப்பிடித்தனர். இதனால் கடந்த 11-ந்தேதி மாலை 5.30 மணிக்கு ராக்கெட் ஏவுதல் நிகழ்ச்சி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து இன்று 19-ந்தேதி ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என்று கடந்த 13-ந்தேதி அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 வீரர்கள், நாளை சர்வதேச விண்வெளி மையத்திற்கு மேற்கொள்ள இருந்த பயணம் மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த பயணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 22ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இந்திய நேரப்படி சரியாக மதியம் 1.12 மணிக்கு ராக்கெட்டை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. மீண்டும் மீண்டும் இந்த திட்டம் தள்ளிவைக்கப்படுவதால் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் விண்வெளி வீரர்கள் மன அழுத்தத்தில் இருக்கிறார்கள்.