
மும்பை,
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) இடைக்கால தலைவராக ராஜீவ் சுக்லா நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது அவர் பி.சி.சி.ஐ. -ன் துணை தலைவராக உள்ளார்.
பி.சி.சி.ஐ.-ன் தற்போதைய தலைவராக உள்ள ரோஜர் பின்னியின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதத்துடன் நிறைவடைய உள்ளது. எனவே புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் வரை அந்த பதவியில் ராஜீவ் சுக்லா நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
ரோஜர் பின்னி, வருகிற ஜூலை 19 ஆம் தேதி 70 வயதை எட்ட உள்ளார். இதனால் பி.சி.சி.ஐ. அரசியலமைப்பில் தலைவர் பதவிக்காக நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பை அவர் தாண்டுவார். இதன் காரணமாக பி.சி.சி.ஐ.-ன் இடைக்கால தலைவராக ராஜீவ் சுக்லா பொறுப்பேற்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
வருகிற ஜூலை மாதத்தில் பொறுப்பேற்கவுள்ள ராஜீவ் சுக்லா 3 மாதங்கள் பதவி வகிப்பார் என்று கூறப்படுகிறது. ஏனெனில் செப்டம்பர் மாதத்தில் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று பி.சி.சி.ஐ. வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.