
லீட்ஸ்,
இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் கடந்த 20-ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 471 ரன்களும், இங்கிலாந்து 465 ரன்களும் எடுத்தன. 6 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா லோகேஷ் ராகுல், ரிஷப் பண்ட் சதத்தால் 364 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது.
இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 371 ரன் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. மெகா இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 4-வது நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்திருந்தது.
இந்த நிலையில் 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நேற்று நடந்தது. இங்கிலாந்தின் வெற்றிக்கு மேற்கொண்டு 350 ரன்கள் தேவை என்ற பரபரப்பான நிலைமையில் அந்த அணியின் பென் டக்கெட்டும், ஜாக் கிராவ்லியும் தொடர்ந்து பேட்டிங் செய்தனர். மழைமேகம் திரண்டு போதிய வெளிச்சம் இல்லாததால் மின்விளக்குகள் ஒளிரவிடப்பட்டன.
டக்கெட்டும், கிராவ்லியும் முதல் ஒரு மணி நேரம் அவசரமின்றி, பொறுமையாக ஆடுவதில் கவனம் செலுத்தினர், வேகப்பந்து வீச்சுக்கு அனுகூலமான மேகமூட்டமான வானிலை நிலவிய போதிலும் அதை இந்திய பவுலர்கள் கனகச்சிதமாக பயன்படுத்திக் கொள்ள தவறினர். எல்லோர் பார்வையும் 'நம்பர் ஒன்' பவுலர் ஜஸ்பிரித் பும்ரா மீதே இருந்தது. அவராலும் இந்த கூட்டணியை உடைக்க முடியவில்லை.
டக்கெட்டுக்கு அதிர்ஷ்டமும் துணை நின்றது. அவர் 97 ரன்னில், முகமது சிராஜ் வீசிய 'ஷாட்பிட்ச்' பந்தை மடக்கி விளாசிய போது, அந்த கேட்ச் வாய்ப்பை ஜெய்ஸ்வால் வீணடித்தார். அடுத்த ஓவரில் பவுண்டரியுடன் டக்கெட் தனது 6-வது சதத்தை பூர்த்தி செய்தார். மேலும் இங்கிலாந்து தொடக்க வீரர் ஒருவர் 4-வது இன்னிங்சில் (இலக்கை விரட்டும் இன்னிங்ஸ்) சதம் அடிப்பது 2010-ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும். இடையில் மழையால் ஆட்டம் 20 நிமிடங்கள் தடைபட்டது.
இந்தியாவுக்கு தொல்லை கொடுத்த இந்த ஜோடியை ஒரு வழியாக ஸ்கோர் 188-ஐ (42.2 ஓவர்) எட்டிய போது வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா பிரித்தார். அவரது பந்தில் ஜாக் கிராவ்லி (65 ரன், 126 பந்து, 7 பவுண்டரி) ராகுலிடம் கேட்ச் ஆனார். இவர்கள் ஜோடியாக எடுத்த 188 ரன்கள், 4-வது இன்னிங்சில் இந்தியாவுக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த தொடக்க ஜோடி என்ற பெருமையை பெற வைத்தது. அடுத்த வந்த ஆலி போப் (8 ரன்) பிரசித் கிருஷ்ணா பந்தில் போல்டு ஆனார்.
இங்கிலாந்து வெற்றி
மறுமுனையில் பென் டக்கெட்டின் ரன்வேட்டை நீடித்ததால் இங்கிலாந்தின் உத்வேகம் துளியும் குறையாமல் பயணித்தது. ஸ்கோர் 253-ஆக உயர்ந்த போது, டக்கெட் 149 ரன்களில் (170 பந்து, 21 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஷர்துல் தாக்குர் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அதன் பிறகே இந்திய வீரர்கள் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விட்டனர். அடுத்து களம் கண்ட ஹாரி புரூக்கும் (0) அதே ஓவரில் வீழ்ந்தார். கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தனது பங்குக்கு 33 ரன் எடுத்தார்.
இதைத் தொடர்ந்து 6-வது விக்கெட்டுக்கு ஜோ ரூட்டும், விக்கெட் கீப்பர் ஜாமி சுமித்தும் இணைந்து தங்கள் அணியை வெற்றிகரமாக கரைசேர்த்தனர். ஆட்ட நேரம் நிறைவடைய கடைசி அரைமணி நேரம் இருந்த போது, ஜடேஜாவின் ஓவரில் ஜாமி சுமித், பவுண்டரி, இரு சிக்சர்கள் விளாசி முடித்து வைத்தார்.
இங்கிலாந்து அணி 82 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 373 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அமர்க்களமான ஒரு வெற்றியை ருசித்தது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து விரட்டிப்பிடித்த 2-வது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். ஜோ ரூட் 53 ரன்னுடனும், ஜாமி சுமித் 44 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இந்திய தரப்பில் ஷர்துல் தாக்குர், பிரசித் கிருஷ்ணா தலா 2 விக்கெட் கைப்பற்றினர். பும்ராவுக்கு விக்கெட் கிடைக்கவில்லை.
இரண்டு முறை மழை குறுக்கிட்ட போதிலும் சிறிது நேரத்திலேயே நின்று போனதால் அந்த வகையில் இந்தியாவுக்கு அதிர்ஷ்டம் இல்லாமல் போய் விட்டது. இந்த டெஸ்டில் இரு அணிகளும் சேர்ந்து மொத்தம் 1,673 ரன்கள் குவித்துள்ளன. இந்தியா- இங்கிலாந்து மோதிய ஒரு டெஸ்டில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள் இது தான்.
இந்நிலையில் தோல்வி குறித்து பதில் அளித்த இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், "இந்த டெஸ்ட் போட்டி மிகவும் சிறப்பானதாக எங்களுக்கு அமைந்தது. எங்களுக்கான வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால் நாங்கள் பல கேட்ச்களை தவற விட்டோம். அதுமட்டுமல்லாமல் எங்கள் அணியின் கீழ் வரிசை வீரர்கள் பெரிய அளவு ரன்கள் சேர்க்கவில்லை.
இந்த இரண்டு விஷயங்களால் நாங்கள் இந்த போட்டியை இழந்து விட்டோம். நாங்கள் 430 ரன்கள் என்ற இலக்கை இங்கிலாந்து அணிக்கு நிர்ணயிக்க வேண்டும் என்று நினைத்தோம். துரதிர்ஷ்டவசமாக எங்கள் கடைசி 6 விக்கெட்டுகள் வெறும் 25 ரன்களில் நாங்கள் இழந்து விட்டோம். இன்று கூட எங்களுக்கு பல வாய்ப்புகள் அமைந்தது. ஆனால் அதை நாங்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.
நாங்கள் ஏற்கனவே முதல் இன்னிங்சில் கடைசி கட்டத்தில் கொத்தாக விக்கெடுகள் இழந்ததை பற்றி பேசினோம். வரவிருக்கும் டெஸ்ட் போட்டிகளில் இந்த பிரச்சனையை நாங்கள் சரி செய்ய வேண்டும். இது போன்ற ஆடுகளங்களில் விக்கெட் எடுக்கும் வாய்ப்பு மிகவும் எளிதாக இருக்காது. எனினும் எங்கள் அணியில் உள்ள வீரர்கள் அனுபவம் இல்லாதவர்கள். இளம் வீரர்களால் நிறைந்தது எங்கள் அணி. எனவே அவர்கள் தங்களை வளர்த்துக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.
இன்றைய நாளில் முதல் செஷனில் நாங்கள் நன்றாகவே பந்து வீசினோம். பெரிய அளவு ரன்களை கொடுக்கவில்லை. ஆனால் பந்து பழையதாக மாறியவுடன் ரன்களை கட்டுப்படுத்துவது என்பது மிகவும் கடினமாக இருந்தது. பந்து பழையதாக மாறிய பிறகும் விக்கெட்டை எடுக்கும் யுக்தியை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
பந்து பழையதாகிவிட்ட பிறகு அவர்கள் நன்றாக பேட் செய்தனர், அவர்கள் தங்கள் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டனர்.
ஜடேஜா நன்றாக பந்து வீசி வாய்ப்புகளை ஏற்படுத்தினார். இதேபோன்று பும்ரா எந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார் என்பது குறித்து நாங்கள் இன்னும் முடிவெடுக்கவில்லை. ஒவ்வொரு போட்டிக்கு முன்பு தான் நாங்கள் அதற்கான முடிவை எடுப்போம்" என்று அவர் கூறினார்.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 2-வது டெஸ்ட் போட்டி வருகிற 2-ந்தேதி பர்மிங்காமில் தொடங்குகிறது.