சென்னை: இந்தாண்டு இறுதிக்குள் 3 ஆயிரம் கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார். சென்னை பாடி திருவல்லீஸ்வரர் கோயிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் திருக்குளம் சீரமைத்தல், புதிய நீராழி மற்றும் காரிய மண்டபம் கட்டுவதற்கான பணியையும், ரூ.85 லட்சம் செலவில் புதிதாக திருத்தேர் செய்கின்ற பணியையும் மற்றும் ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் கைலாசநாதர் கோயிலை உயர்த்தி கட்டுவதற்கான பணிகளையும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழகத்தில் இதுவரை 2,664 கோயில்களில் கும்பாபிஷேகம் முடிவுற்றுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள்ளாக கும்பாபிஷேகத்தின் எண்ணிக்கை நிச்சயம் 3 ஆயிரத்தை தாண்டும். மேலும், திமுக ஆட்சி ஏற்பட்ட பிறகு சுமார் 114 தேர்கள், ரூ.74 கோடி செலவில் புதிதாக உருவாக்கப்பட்டிருக்கின்றது. திருத்தேர் மராமத்து பணிக்கு மட்டும் சுமார் ரூ.16 கோடி செலவில் 64 தேர்கள் எடுத்துக் கொள்ளப்பட்டு பணிகள் நிறைவுற்றிருக்கின்றன.