இதற்கு போய் நிபந்தனையா?

1 day ago 4

பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் முதல் முறையாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். இதற்கு அரசியல் ரீதியாக பல விமர்சனங்கள் வந்தாலும், அதில் பங்கேற்றதன் மூலம் தமிழ்நாட்டுக்கு தேவையான பல கோரிக்கைகளை மத்திய அரசாங்கத்துக்கு குறிப்பாக பிரதமர் மோடியின் கவனத்துக்கு கொண்டுசெல்லமுடிந்தது.

நிதி ஆயோக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசும்போது, தமிழ்நாட்டுக்கு உரிய நிதியை தாமதமின்றி தரவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கூறினார். மேலும் இந்தியாவின் இலக்கான 30 டிரில்லியன் பொருளாதாரத்தில் தமிழகத்தின் பங்களிப்பு வலுவாக இருக்கும் என்று பெருமையுடன் உறுதியளித்தார். இதுமட்டுமல்லாமல் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் தங்கள் வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கு மத்திய அரசாங்கம் பாகுபாடின்றி ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று கூறிவிட்டு, ஒரு கோரிக்கையை அழுத்தம் திருத்தமாக முன்வைத்தார்.

பி.எம்.ஸ்ரீ. பள்ளித்திட்டம் தொடர்பாக கல்வி அமைச்சகத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சில மாநிலங்கள் கையெழுத்து போடாததால் சமக்ர சிக்ஷா அபியான் நிதி மறுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 2024-25-ம் ஆண்டில் ரூ.2 ஆயிரத்து 200 கோடி மத்திய அரசாங்க நிதி தமிழ்நாட்டுக்கு மறுக்கப்பட்டுள்ளது. இது அரசு பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் மற்றும் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் படிக்கும் குழந்தைகளின் கல்வியையும் பாதிக்கிறது. எனவே தாமதமில்லாமல் ஒருதலைபட்ச நிபந்தனைகளை வலியுறுத்தாமல் நிதியை விடுவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று மு.க.ஸ்டாலின் மிக ஆழமாக வலியுறுத்தி பேசியது மோடியின் கவனத்தை ஈர்த்தது.

இதோடு அவர் விட்டுவிடவில்லை. பிரதமரை சந்தித்து தமிழகத்தின் கோரிக்கைகளை உள்ளடக்கிய மனுவையும் கொடுத்து, அதையெல்லாம் நிறைவேற்றித்தர கேட்டுக்கொண்டார். அதில், சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்துக்கு மத்திய அரசாங்கம் தரவேண்டிய நிதியை விளக்கமாக குறிப்பிட்டிருந்தார். 2024-25-ம் ஆண்டு இந்த திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட நிதி ஒதுக்கீடு ரூ.4305.66 கோடியாகும். இதில் மத்திய அரசாங்கத்தின் பங்கான ரூ.2,151.59 கோடி இதுவரை வழங்கப்படவில்லை. இதுமட்டுமல்லாமல் 2025-26-ம் ஆண்டுக்காக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள ரூ.2,733.57 கோடியில் மத்திய அரசாங்கத்தின் பங்கான ரூ.1,640.14 கோடியும் விடுவிக்கப்படவில்லை.

இந்த தொகைக்கான முதல் தவணையை தரவேண்டும் என்று ஏற்கனவே தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் நிதியை தராததற்கான காரணமாக தமிழக அரசு பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்திடாததை மத்திய அரசாங்கம் கூறிவருகிறது என்று கூறிய மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு பாரம்பரியமாக தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழி கொள்கையைத்தான் பின்பற்றிவருகிறது. ஆனால் பி.எம்.ஸ்ரீ திட்டம் மும்மொழி கொள்கையை வலியுறுத்துகிறது. எனவே அதை வலியுறுத்தாமல் சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்துக்கு நிலுவையில் உள்ள நிதியை உடனடியாக விடுவிக்குமாறு வலியுறுத்தினார்.

இந்த திட்டம் மத்திய அரசின் 60 சதவீத பங்களிப்புடனும் மாநில அரசின் 40 சதவீத பங்களிப்புடனும் செயல்படுத்தப்பட்டுவருகிறது. தமிழக அரசு தனது பங்களிப்பு தொகையைக்கொண்டு ஆசிரியர்களுக்கான சம்பளம் உள்ளிட்ட பல செலவுகளை செய்துவருகிறது. மத்திய அரசாங்கம் தன் ஒதுக்கீட்டு தொகையை விடுவிக்காததால் தனியார் பள்ளிக்கூடங்களில் படிக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை வழங்குவது தொடர்பாக இந்த கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு இன்னும் வெளியிடப்படாமல் இருக்கிறது. இதனால் ஏழை மாணவர்களின் கல்வி பெரிதும் பாதிக்கப்படும். இந்த திட்டத்தை மும்மொழி திட்டத்தோடு இணைக்காமல் மத்திய அரசாங்கம் மு.க.ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று உடனடியாக நிதியை விடுவிக்கவேண்டும்.

Read Entire Article