
கனடா,
மின்னலே படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஹாரிஸ் ஜெயராஜ் தமிழ்த் திரையிசை உலகையே பெரும் வியப்பில் ஆழ்த்தினார். படத்தில் இடம்பெற்ற ஒன்பது பாடல்களும் மிகப் பெரும் வெற்றியைப் பெற்றன. பின்னணி இசையும் தீம் இசைத் துணுக்குகளும்கூட ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தன. இதற்கு முன்பே சில படங்களில் பாடல்களை எழுதியிருப்பவரான தாமரை இந்தப் படத்தில் எழுதிய 'வசீகரா', 'இவன் யாரோ' உள்ளிட்ட பாடல்களின் மூலம் அனைவராலும் கவனிக்கப்பட்டார். இந்தப் படத்துக்குப் பிறகு கவுதம் -ஹாரிஸ்-தாமரை கூட்டணி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத வெற்றிக் கூட்டணிகளில் ஒன்றாக இன்றளவும் திகழ்கிறது.
ஹாரிஸ் பாடல்கள் என்றாலே தனித்துவம்தான். தற்போது இசையமைக்கும் படங்கள் குறைவு என்றாலும், இசை நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். அந்த வகையில் அண்மையில் நடத்திய இசை நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.
சமீபத்தில் இசையமைப்பாளர் ஹாரிஸ் அளித்த பேட்டியில் "துப்பாக்கி படத்திற்கு பிறகு விஜய் நடிக்க கூடிய பத்து படங்களை தவிர்த்தேன். என்னால், ஆயிரம் கமிட்மெண்டோடு பல படங்களுக்கு இசையமைக்கும் ஜாம்பவான் கிடையாது. ஒரு படத்தில் இசையமைத்தாலும் துல்லியமாக பிடித்து செய்ய வேண்டும். எல்லோரும் என்னிடம் இப்போது படம் செய்வது இல்லை ஏன்? தொடர் தோல்வி படங்களாக இருக்கிறதா? என்று கேட்கிறார்கள். அப்படியெல்லாம் இல்லை, பிடித்த படங்களை பிடித்த நேரத்தில் செய்துகொண்டிருக்கிறேன்" என தெரிவித்தார்.
இசையமைப்பாளர் ஹாரிஸ் தற்போது உலகெங்கும் இசை நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். அண்மையில் கோவையில் இவர் நடத்திய இசை நிகழ்ச்சி பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. ரசிகர்கள் அவரது பாடல்களை கேட்டு மயங்கி போனார்கள். அந்த அளவிற்கு வைப்போடும் இசை நிகழ்ச்சியை ஹாரிஸ் நடத்தியிருந்தார். இதைத்தொடர்ந்து தமிழ்நாட்டையும் தாண்டி சிங்கப்பூர், மலேசியா, போன்ற நாடுகளிலும் கான்சர்ட் நடத்தி வருகிறார்.

பல நாடுகளில் இசை நிகழ்ச்சியை நடத்தி வரும் ஹாரிஸ் ஜெயராஜிற்கு ரசிகர்கள் கொடுக்கும் அன்பு விலைமதிப்பில்லாதது. அண்மையில் கனடா நாட்டின் டொரண்டோவில் தனது இசைக்குழுவுடன் கான்சர்ட் செய்திருந்தார். இதற்காக அந்நாட்டு அரசு ஹாரிஸ் ஜெயராஜை கவுரவித்திருக்கிறது. இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகிள்ளது. இதற்கு அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.