
பர்மிங்காம்,
சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் லீட்சில் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி பர்மிங்காமில் ஜூலை 2-ம் தேதி தொடங்க உள்ளது.
இந்நிலையில் இந்த போட்டியில் தமிழக வீரரான சாய் சுதர்சன் களமிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய சாய் சுதர்சனுக்கு பீல்டிங்கின்போது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது. காயம் இன்னும் முழுமையாக குணமடையவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவர் 2-வது போட்டியில் களமிறங்குவாரா? என்பது உறுதியாக தெரியவில்லை. 2-வது போட்டிக்கு முன் முழு உடற்தகுதி பெற்றால் அவர் களமிறங்குவார் என்று கூறப்படுகிறது.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய சாய் சுதர்சன் 0 (முதல் இன்னிங்ஸ்), 30 ரன்கள் (2-வது இன்னிங்ஸ்) மட்டுமே அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.