
லீட்ஸ்,
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நடைபெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கி உள்ளது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 0-1 என்ற கணக்கில் பின்தங்கி உள்ளது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி ஜூலை 2-ம் தேதி பர்மிங்காமில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற இந்திய அணி தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறது.
முன்னதாக முதல் போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சு பெரிய அளவில் செயல்பாடுகளை வெளிப்படுத்தவில்லை. முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஆன ஜஸ்பிரித் பும்ரா மட்டுமே அணிக்கு நம்பிக்கை அளித்து வருகிறார். முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார்.
இருப்பினும் பனிச்சுமை காரணமாக அவரால் இந்த தொடரின் 3 போட்டிகளில் மட்டுமே விளையாட முடியும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் அது எந்த 3 போட்டிகள் என்று தெரியவில்லை.
ஆனால் இந்த தொடரில் இந்திய அணி வெற்றி பெற பும்ரா அனைத்து போட்டிகளிலும் விளையாட வேண்டும் என்று பல இந்திய முன்னாள் வீரர்கள் கூறிவருகின்றனர். ஏனெனில் பும்ரா, முகமது சிராஜ் நீங்கலாக மற்ற வேகப்பந்து வீச்சாளர்களிடம் அனுபவம் இல்லை. எனவே பும்ரா அனைத்து போட்டிகளிலும் விளையாட வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் பும்ரா கூடுதல் போட்டிகளில் விளையாடுவாரா? என்று தலைமை பயிற்சியாளர் ஆன கவுதம் கம்பீரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த கம்பீர், "இல்லை, எங்கள் திட்டங்கள் அப்படியே உள்ளன. பும்ராவின் பணிச்சுமையை நிர்வகிப்பது மிக முக்கியம். ஏனென்றால் எங்களுக்கு நிறைய தொடர்கள் வர உள்ளன. இந்த சுற்றுப்பயணம் தொடங்குவதற்கு முன்பு, அவர் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார் என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால் எந்த 3 என்று நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை. அவரது உடல் எவ்வாறு தாங்குகிறது என்பதைப் பார்ப்போம்.
ஆனால் நாங்கள் எங்களது பந்துவீச்சு குழுவை முழுமையாக நம்புகிறோம். நம்பிக்கையின் அடிப்படையில் அல்ல, திறமையின் அடிப்படையில் அவர்களைத் தேர்ந்தெடுத்தோம். காலப்போக்கில் அவர்கள் தொடர்ந்து சிறப்பாக வருவார்கள்" என்று கூறினார்.