*கடந்த ஆண்டைவிட 1.66 லட்சம் பேர் குறைவு
ஊட்டி : இ-பாஸ் கட்டுப்பாடு, மாத கடைசியில் ரெட் அலர்ட் காரணமாக சுற்றுலா தலங்கள் மூடல் உள்ளிட்டவற்றால் ஊட்டி படகு இல்லத்தில் இந்த ஆண்டு கோடை சீசனில் 5.08 லட்சம் சுற்றுலா பயணிகளே படகு சவாரி செய்துள்ளனர். இது கடந்த ஆண்டை காட்டிலும் 1.66 பேர் லட்சம் குறைவாகும். மலைகளின் அரசியான நீலகிரிக்கு ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
குறிப்பாக கோடை சீசன் காலமான ஏப்ரல், மே மாதங்களில் கூட்டம் அலைமோதும். நடப்பு ஆண்டு கோடை சீசனில் மட்டும் 6 லட்சம் பேர் வந்து சென்றனர். ஊட்டி வரக் கூடிய சுற்றுலா பயணிகள் படகு இல்லத்தில் இருந்து ஊட்டி ஏரியில் படகு சவாரி செய்ய தவறுவதில்லை.
சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்ய வசதியாக மோட்டார் படகுகள், துடுப்பு படகுகள், மிதி படகுகள் உள்ளன. இவற்றை பயன்படுத்தி உற்சாகமாக படகு சவாரி செய்கின்றனர். ஏரி கரையோரம் மரங்களில் அமர்ந்திருந்து ஓய்வு எடுக்கும் புள்ளி மூக்கு வாத்துகளையும் கண்டு ரசிக்கின்றனர்.
இதேபோல் ஏரியின் மறு கரையில் உள்ள தேனிலவு படகு இல்லத்தில் இருந்தும் படகு சவாரி ெசய்கின்றனர். கடந்த ஆண்டு கோடை சீசன் மாதங்களான ஏப்ரலில் 3,28,480 பேரும், மே மாதத்தில் 3,45,983 பேரும் என மொத்தம் 6 லட்சத்து 74 ஆயிரத்து 463 பேர் ஊட்டி ஏரியில் படகு சவாரி செய்தனர்.
இந்த ஆண்டு ஏப்ரலில் 2,58,735 பேரும், மே மாதத்தில் 2,49,425 பேரும் என 5 லட்சத்து 8 ஆயிரத்து 160 ேபர் படகு சவாரி செய்துள்ளனர். இது கடந்த ஆண்டை காட்டிலும் 1 லட்சத்து 66 ஆயிரத்து 303 பேர் குறைவு ஆகும். நீலகிரி மாவட்டத்திற்கு செல்ல கடந்த ஆண்டு மே 7ம் தேதி முதல் இ-பாஸ் முறை அமலில் உள்ளது.
நடப்பு ஆண்டு கோடை சீசனின்போது வார நாட்களில் நீலகிரிக்கு 6 ஆயிரம் வாகனங்களும், வார இறுதி நாட்களில் 8 ஆயிரம் வாகனங்களும் மட்டுமே நீலகிரிக்குள் அனுமதிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் ஊட்டி வர ஆர்வம் காட்டவில்லை. ஒரு பக்கம் இ-பாஸ் நடைமுறை காரணமாக சுற்றுலா பயணிகள் வராத நிலையில், மே மாத துவக்கத்தில் இருந்து அவ்வப்போது மழை பெய்தது. மழை பெய்யும் சமயங்களில் படகு சவாரி நிறுத்தப்பட்டது.
தொடர்ந்து தென் மேற்கு பருவமழை காரணமாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் வரத்து குறைந்தது. கடந்த மாதம் 24ம் தேதியில் இருந்து சுமார் 5 நாட்களுக்கும் மேலாக கனமழை கொட்டிய நிலையில், ஊட்டி படகு இல்லத்தில் 4 நாட்கள் முழுமையாக படகு சவாரி நிறுத்தப்பட்டது.
மழை குறைந்த சமயங்களில் சில மணி நேரங்கள் மட்டுமே படகு சவாரி அனுமதிக்கப்பட்டது. இதனால் நடப்பாண்டில் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை சரிந்ததாக சுற்றுலா வளர்ச்சி கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post இ-பாஸ் கட்டுப்பாடு, திடீர் மழை எதிரொலி ஊட்டி படகு இல்லத்திற்கு சுற்றுலா பயணிகள் வருகை சரிவு appeared first on Dinakaran.