
டெல்லி,
அரசு துறைகளில் பல்வேறு தகவல்களை அறிய தகவல் அறியும் உரிமை சட்டம் (ஆர்டிஐ) பயன்படுகிறது. இந்த சட்டத்தின் மூலம் பொதுமக்கள் www.rtionline.gov.in என்ற இணையதளம் வாயிலாக மனு அனுப்பலாம். இந்த இணையதளத்திலேயே மனுக்களின் நிலைமை (Status) குறித்து அறியலாம், மேல்முறையீட்டையும் தாக்கல் செய்யலாம்.
இந்நிலையில், ஆர்டிஐ இணையதளத்தில் பதிவு செய்யப்படும் அனைத்து மனுக்களின் இமெயில் முகவரி ஓடிபி மூலம் சரிபார்க்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த நடைமுறை 16ம் தேதி முதல் அமலுக்குவரும் என்று மத்திய அரசின்கீழ் இயங்கும் பணியாளர் மற்றும் பயிற்சித்துறை அறிவித்துள்ளது.
மக்களின் தனியுரிமை மற்றும் தரவு பாதுகாப்பை மேம்படுத்தவும், இணையதளத்தின் சைபர் பாதுகாப்பு கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தவும் ஓடிபி மூலம் இமெயில் சரிபார்க்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.