பெங்களூரு: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வாங்க உள்ளதாக வெளியான தகவல்களை கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் திட்டவட்டமாக மறுத்துள்ளார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 18 ஆண்டுகளுக்குப் பின் ஐபிஎல் வரலாற்றில் கோப்பை வென்றது. இதையடுத்து பெங்களூரில் நடைபெற்ற வெற்றி விழா துயரத்தில் முடிந்தது. கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த நிலையில், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனிடையே, கூட்டத்தை முறையாக கட்டுப்படுத்த தவறியதாக 5க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் தான் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் உள்ள தங்களது முழு உரிமத்தையோ அல்லது பகுதி உரிமத்தையோ விற்கப் போவதாக அதன் நிறுவனமான யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிட் தெரிவித்தது. மேலும், ஆர்சிபி அணிக்கு 2 பில்லியன் டாலர் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் வாங்க உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த டி.கே.சிவகுமாரிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், பெங்களூரு அணியை வாங்க நான் ஒன்றும் பைத்தியக்காரன் இல்லை. நான் என் சிறு வயதிலிருந்தே கர்நாடக கிரிக்கெட் சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறேன், அவ்வளவுதான். நிர்வாகத்தில் சேர எனக்கு வாய்ப்புகள் வந்தாலும், எனக்கு நேரமில்லை. எனக்கு ஏன் ஆர்சிபி தேவை? நான் ராயல் சேலஞ்ச் கூட குடிப்பதில்லை என்று தெரிவித்துள்ளார்.
The post ஆர்சிபி அணியை வாங்க நான் என்ன பைத்தியக்காரனா: கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பேட்டி appeared first on Dinakaran.