ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் ஒரு மாதமாக வழங்காமல் இருந்த ஆர்.சி. ஸ்மார்ட் கார்டுகள் விநியோகிக்கும் பணி துவங்கியது

2 months ago 7

கோவை, ஏப். 17: கோவை வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஆர்.சி.க்கான ஸ்மார்ட் கார்டு தட்டுப்பாடு காரணமாக கடந்த ஒரு மாதமாக வழங்காமல் இருந்த ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் பணி துவங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் புதிய வாகனம் மற்றும் பழைய வாகனம் பெயர் மாற்றம் செய்த பிறகு வாகன பதிவு சான்றிதழ் (ஆர்.சி புத்தகம்) ஸ்மார்ட் கார்டில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஸ்மார்ட் ஆர்.சி. கார்டு வாகன உரிமையாளர் வீட்டிற்கே பதிவு தபால் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட் கார்டு கட்டணம், தபால் கட்டணம் ஆகியவை விண்ணப்பதாரரிடம் இருந்து பெறப்படுகிறது. மாநிலம் முழுவதும் உள்ள ஆர்.டி.ஓ. அலுவலகங்கள் மூலம் மாதம் ஒரு லட்சம் லைசென்ஸ், ஆர்.சி., ஸ்மார்ட் கார்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக ஆர்.சி., ஸ்மார்ட் கார்டுகள் பற்றாக்குறையால் மாநிலம் முழுவதும் ஆர்.சி. கார்டு விநியோகிக்கும் பணிகள் முடங்கியது. இதனால், கோவை சரக இணை போக்குவரத்து கமிஷனர் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் கோவை வடக்கு, தெற்கு, மையம், மேற்கு, சூலூர், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், திருப்பூர் உள்பட மொத்தம் 16 அலுவலகம் உள்ளன. இந்த அலுவலகங்களில் கடந்த ஒரு மாதமாக ஆர்.சி ஸ்மார்ட் கார்டுகள் பற்றாக்குறை இருந்தது. இதனால், புதிய வாகனம் மற்றும் பழைய வாகனம் பெயர் மாற்றம் செய்தவர்களுக்கு ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில், தற்போது 16 அலுவலத்திற்கும் விநியோகிக்கப்பட வேண்டிய ஸ்மார்ட் கார்டுகள் வந்துள்ளது. இதையடுத்து, ஆர்.சி., ஸ்மார்ட் கார்டுகள் வாகன உரிமையாளர்களின் வீட்டிற்கே பதிவு தபால் மூலம் அனுப்பும் பணிகள் துவங்கியுள்ளது.

இதனால், அடுத்த 10 நாட்களில் கடந்த ஒரு மாதமாக வழங்காமல் இருந்த அனைவருக்கும் ஸ்மார்ட் ஆர்.சி. கார்டுகள் விநியோகம் செய்யப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர். இது குறித்து கோவை போக்குவரத்து இணை கமிஷனர் அழகரசு கூறுகையில், ‘‘ஆர்.சி. ஸ்மார்ட் கார்டுகள் பிரிண்டிங் ஆகாமல் இருந்தது. மாநிலம் முழுவதும் இந்த நிலை இருந்தது. தற்போது, கோவைக்கு தேவையான ஸ்மார்ட் கார்டுகள் வந்துள்ளன. இவை கடந்த ஒரு மாதமாக வழங்காமல் இருந்த வாகன உரிமையாளர்களுக்கு தபால் மூலம் அனுப்பும் பணி துவங்கியுள்ளது. விரைவில் அனைவருக்கும் ஆர்.சி. ஸ்மார்ட் கார்டுகள் கிடைக்கும்’’ என்றார்.

The post ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் ஒரு மாதமாக வழங்காமல் இருந்த ஆர்.சி. ஸ்மார்ட் கார்டுகள் விநியோகிக்கும் பணி துவங்கியது appeared first on Dinakaran.

Read Entire Article