
ஆரணி நகராட்சி எதிர்ப்பகுதியில் அமைந்துள்ள கோட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் மற்றும் கன்ராய சுவாமி திருக்கோவில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு தமிழ் முறைப்படி திருக்குடமுழுக்கு விழா (மகா கும்பாபிஷேக விழா) இன்று காலை நடைபெற்றது.
முன்னதாக கோவில் அருகாமையில் யாக மேடைகள், யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு புனித நீர் நிரப்பப்பட்ட கலசங்கள் வைத்து தமிழ் முறைப்படி 3 கால யாக பூஜைகளை காஞ்சிபுரம் ஆடலரசு தேசிகர் சுவாமிகள் தலைமையில் தமிழ் முறைப்படி வேதபாராயணம் செய்து வேள்வி பூஜைகள் நடந்தன. பின்னர் பூஜிக்கப்பட்ட புனித நீர் கலசங்களுடன், மங்கள வாத்தியங்களுடன் கோவிலில் வலம் வந்து முகப்பு கோபுரம், நுழைவு வாயில் கோபுரம், கருவறை கோபுரம், முத்துமாரியம்மன் மற்றும் கன்ராய சுவாமி , முனீஸ்வரன் ஆகிய சுவாமிகளுக்கு புனித நீர் ஊற்றி திருக்குடமுழுக்கு நடத்தப்பட்டது.
இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.