கிருஷ்ணகிரி, மே 29: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தாலுகா குலுசாமனப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன்(28), கூலி தொழிலாளி. இவரது மனைவி கீதாஞ்சலி (24). கர்ப்பிணியான இவருக்கு, நேற்று முன்தினம் (27ம் தேதி) காலை 8.50 மணி அளவில், பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் இருந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆம்புலன்சை டிரைவர் அன்பு ஓட்டி வந்தார்.
ஓசூர் -கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், குருபரப்பள்ளி அருகே ஆம்புலன்ஸ் வந்து கொண்டிருந்த போது, அதிக வலியால் கீதாஞ்சலி துடித்தார். உடனே ஆம்புலன்சை டிரைவர் அன்பு, சாலையோரம் பாதுகாப்பாக நிறுத்தினார். பின்னர், ஆம்புலன்சில் இருந்த மருத்துவ உதவியாளர் சிவரஞ்சனி, கீதாஞ்சலிக்கு பிரசவம் பார்த்தார். அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து தாயையும், சேயையும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு இருவரும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
The post ஆம்புலன்சில் குழந்தை பிரசவித்த இளம்பெண் appeared first on Dinakaran.