ஆமா… இது என்ன மரம்? க்யூஆர் கோடு விபரம் தரும்

1 day ago 3

காரைக்குடி : சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள அரியக்குடியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 900 மாணவ, மாணவிகளுக்கு மேல் படித்து வருகின்றனர்.

தரமான கட்டிடங்கள், காற்றோட்டமான வகுப்பறை, 150க்கும் மேற்பட்டவர்கள் அமரக்கூடிய வகையிலான மினி ஆடிட்டோரியம், சுத்திகரிப்பட்ட குடிநீர், முன்மாதிரியான நூலகம், கம்ப்யூட்டர் லேப் என அனைத்து வசதிகளுடன் முன்மாதிரியான அரசு பள்ளியாக செயல்பட்டு வருகிறது. 10 ஏக்கர் பரப்பளவு கொண்ட இப்பள்ளியில் 7 ஏக்கருக்கு மேல் விளையாட்டு மைதானம் வசதி உள்ளது.

இப்பள்ளியில் செம்மரம், சந்தனம், கிராம்பு, மகாகனி, மகிழம், இலுப்பை, அத்தி, மருது என 500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்படுகிறது. மரங்களின் அனைத்து விவரங்களை மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் தேசிய பசுமைப்படை மாணவர்கள் முயற்சியில் ‘க்யூஆர் கோடு’ வசதி செய்துள்ளனர்.

மரங்களில் ஒட்டப்பட்டுள்ள க்யூஆர் கோடை ஸ்கேன் செய்வதன் மூலம் மரங்களின் தாவரவியல் பெயர், மரங்களில் உள்ள இலை, பூ, காய், விதை, எந்த நாட்டை சேர்ந்த மரம் என்பது உள்பட அனைத்து விவரங்களையும் மாணவர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அறிந்து கொள்ளலாம்.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, ‘க்யூஆர் கோடு’ வசதி அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் பிரிட்டோ தலைமை வகித்தார். காரைக்குடி தாசில்தார் ராஜா க்யூஆர் கோடு வசதியை அறிமுகப்படுத்தி பேசினார். இதில், விஏஓ செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post ஆமா… இது என்ன மரம்? க்யூஆர் கோடு விபரம் தரும் appeared first on Dinakaran.

Read Entire Article