
மொகாதிசு,
கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு சோமாலியா. இந்நாட்டில் அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான அல்ஷபா பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த பயங்கரவாத குழுவை ஒழிக்க வெளிநாட்டு படைகள் சோமாலியா அரசுப்படையுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றன. ஆப்பிரிக்க யூனியன் அமைதிப்படை என்ற பெயரில் உகாண்டா, கென்யா உள்ளிட்ட நாடுகளின் அரசுப்படைகள் சோமாலியா படைகளுடன் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், அந்நாட்டின் லொயர் ஷபெலில் மாகாணத்தில் இருந்து தலைநகர் மொகாதிசுவில் உள்ள விமான நிலையத்திற்கு இன்று ராணுவ ஹெலிகாப்டர் வந்தது. அந்த ஹெலிகாப்டரில் ஆப்பிரிக்க யூனியன் அமைதிப்படையின் ராணுவ வீரர்கள் பயணித்தனர். ஹெலிகாப்டர் விமான நிலையத்தில் தரையிறங்க முயற்சித்தபோது எதிர்பாராத விதமாக தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் ஹெலிகாப்டரில் பயணித்த ராணுவ வீரர்கள் 3 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.