
புவனேஸ்வரம்,
வீட்டு உரிமையாளரின் மனைவி மற்றும் அவரது மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த வீட்டு வேலைக்காரரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சரோஜ் குமார். இவர் படகாடா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வேலை செய்து வந்தார். அந்த வீட்டின் உரிமையாளருக்கு திருமணமாகி மனைவியும், பள்ளியில் படிக்கும் மகளும் உள்ளனர்.
வீட்டு உரிமையாளரின் மனைவி மற்றும் மகளையும் அவர்களுக்கு தெரியாமலேயே ஆபாசமாக வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து அவர்களை மிரட்டி வந்துள்ளார். அவற்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று கூறி அவர்கள் இருவரையும் பல நாட்களாக பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.
சரோஜ் குமாரின் தொல்லையை பொறுத்துக்கொள்ள முடியாத அந்த பெண், நடந்த சம்பவம் பற்றி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையின் போது, சரோஜ் குமார் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்டவரின் பெயரில் ஜாஜ்பூர் காவல் நிலையத்தில் ஏற்கனவே ஒரு வழக்கு இருப்பதும் கண்டறியப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும், பிஎன்எஸ், ஐடி சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.