டெல்லி: கடந்த 13-ம் தேதி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது. இது ஈரானின் அணு ஆயுத பயன்பாட்டுக்கு எதிரான தாக்குதல் என இஸ்ரேல் கூறியது. இதனை தொடர்ந்து ஈரானும் பதில் தாக்குதல் நடத்தியது. இதன் காரணமாக, 2 நாடுகள் இடையே போர் பதற்றம் அதிகரித்தது. இந்த நிலையில் ஈரானில் உள்ள இந்தியர்களை மீட்க இந்திய அரசு நடவடிக்கைகளை தொடங்கியது.
இதன்படி, இந்தியர்களை மீட்டு வரும் நடவடிக்கைக்கு ஆபரேஷன் சிந்து என பெயரிடப்பட்டு உள்ளது. இந்த நடவடிக்கையில் முதல் விமானம் ஈரானில் இருந்து 110 இந்தியர்களுடன் கடந்த 19-ம்தேதி டெல்லி வந்தது. இதனைத்தொடர்ந்து அடுத்தடுத்து ஈரானில் இருந்து விமானங்கள் வந்தன. 290 பேர், 311 பேர், 280 பேர் என இந்தியர்கள் வந்தனர். இந்நிலையில், ஈரானில் சிக்கி தவித்த 282 இந்தியர்கள் சிறப்பு விமானம் மூலம் இன்று(25-06-2025) அதிகாலை 1 மணியளவில் டெல்லி விமான நிலையத்திற்கு வந்தடைந்தனர்.
ஈரானில் இருந்து இதுவரை 2,858 இந்திய நாட்டினர் சொந்த நாட்டுக்கு அழைத்து வரப்பட்டு உள்ளனர். இதனை ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சகம் தனது எக்ஸ் வலைதள பதிவில் தெரிவித்துள்ளது. இதேபோன்று, 3 இலங்கை நாட்டினர் மற்றும் நேபாள நாட்டு குடிமகன்கள் 2 பேர் உள்பட 281 பேர் நேற்று ஈரானில் இருந்து விமானம் மூலம் பாதுகாப்பாக இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர்.
The post ஆபரேஷன் சிந்து : ஈரானில் இருந்து இதுவரை 2,858 இந்தியர்கள் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர் appeared first on Dinakaran.