
சென்னை தியாகராயநகர் பகுதியை சேர்ந்த தொழில் அதிபர் கிஷோர் என்பவரின் செல்போன் வாட்ஸ்அப்புக்கு சமீபத்தில் குறுந்தகவல் வந்தது. அதில் எங்களது வாட்ஸ்அப் குழுவில் சேர்ந்து நாங்கள் ஆலோசனை கூறும் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆசை வார்த்தையில் மயங்கிய கிஷோர் பல்வேறு வங்கி கணக்குகளில் பல பரிவர்த்தனைகளில் ரூ.2 கோடியே 26 லட்சம் அனுப்பி முதலீடு செய்தார். ஆனால் அவருக்கு லாப பணமும் கிடைக்கவில்லை, முதலீடு பணமும் திரும்ப கிடைக்கவில்லை. இந்த மோசடி குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
மோசடி கும்பல் பணத்தை சத்திய நாராயணன் (வயது 60), மணிவேல்(25), ரோஷன்(35), சிம்சேன் செல்லதுரை(26) ஆகிய 4 பேரின் வங்கி கணக்குகளுக்கு அனுப்பி வைத்ததை சைபர் கிரைம் போலீசார் கண்டறிந்தனர். மேலும் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பதுங்கி இருந்த அவர்கள் 4 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த மோசடி திட்டம் வெளிநாட்டில் இருந்து அரங்கேற்றப்பட்டுள்ளது. எனவே வெளிநாட்டில் பதுங்கி உள்ள மோசடி கும்பலை கைது செய்யும் நடவடிக்கையில் சைபர் கிரைம் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.