*தூய்மை பணியாளர் மீட்டு போலீசில் ஒப்படைப்பு
திருமலை : விவசாயியிடம் மர்ம நபர் திருடிச்சென்ற பணம் குப்பைத்தொட்டியில் வீசப்பட்டிருந்தது. இதை தூய்மை பணியாளர் கண்டெடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தார்.
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் சென்னரெட்டிப்பள்ளியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணா, விவசாயி. இவர் கடந்த 7ம் தேதி குடும்பத் தேவைக்காக நகைகளை அடகு வைத்து வங்கியில் இருந்து ₹86 ஆயிரம் கடன் வாங்கினார். இந்தப்பணத்தை பைக்கின் முன்புறம் வைத்துக்கொண்டு வீட்டுக்கு புறப்பட்டார்.
அப்போது மதிய உணவுக்காக அவ்வழியில் உள்ள ஒரு ஓட்டல் எதிரே நிறுத்தினார். ராமகிருஷ்ணா உள்ளே செல்ல முயன்றபோது அவரை பின்தொடர்ந்து பைக்கில் வந்த மர்ம ஆசாமி, இவரது பைக்கில் இருந்த பணத்தை திருடிக்கொண்டு ஓடினார்.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ராமகிருஷ்ணா, அந்த நபரை விரட்டிச்சென்றும் பிடிக்க முடியவில்லை.இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார். போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது பணத்தை திருடிய ஆசாமி, ஸ்ரீனிவாசபுரம் தெருவுக்குள் சென்றது தெரிய வந்தது. அதனை தொடர்ந்து விசாரணையை தொடங்கினர். மேலும் அந்த நபரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் ஸ்ரீனிவாசபுரம் பகுதியில் நேற்றுமுன்தினம் தூய்மைபணியாளரான ராயதுர்கத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர், குப்பை சேகரிப்பில் ஈடுபட்டார். அங்குள்ள தொட்டியில் இருந்த குப்பையை சேகரிக்க முயன்றபோது, பாலிதீன் கவரில் கட்டுக்கட்டாக பணம், வங்கி பாஸ்புக் மற்றும் பான்கார்டு இருந்தது. இதனைக்கண்ட சுரேஷ், அவற்றை மீட்டு உடனடியாக அங்குள்ள போலீஸ் நிலையம் சென்று எஸ்ஐ ஹனீப்பிடம் கொடுத்தார்.
இதையடுத்து எஸ்ஐ ஹனீப் சுரேஷின் நேர்மையை பாராட்டி அவருக்கு ₹1000 பரிசாக அளித்தார்.பாஸ்புக்கை அடிப்படையாகக் கொண்டு, அந்தப்பணம் ராமகிருஷ்ணாவுடையது என்பதை உறுதிசெய்து அவரிடம் எஸ்ஐ கொடுத்தார். தூய்மை பணியாளர் சுரேஷின் நல்ல உள்ளத்தையும் நேர்மையையும் ராமகிருஷ்ணா உள்பட அனைவரும் பாராட்டினர்.
இந்நிலையில் பணத்தை திருடிய ஆசாமி, போலீசாரிடம் சிக்கிவிடுவோம் என்ற அச்சத்தில் குப்கை தொட்டியில் பணத்தை வீசிவிட்டு தப்பி சென்றிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். தொடர்ந்து மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
The post ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் பரபரப்பு குப்பைத்தொட்டியில் கட்டுக்கட்டாக பணம் appeared first on Dinakaran.