
புதுடெல்லி,
அமெரிக்கா சென்றுள்ள காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, பாஸ்டன் நகரில் இந்தியர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் உரையாற்றினார். அப்போது அவர், சமீபத்தில் நடந்த மராட்டிய சட்டசபை தேர்தலில் மோசடி நடந்ததாகவும், அதற்கு தேர்தல் ஆணையம் துணை போனதாகவும் குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், "மராட்டியத்தில் உள்ள மொத்த மக்களின் எண்ணிக்கையை விட வாக்களித்தவர்களின் எண்ணிக்கை அதிகம். இது ஒரு உண்மை. மாலை 5.30 மணியளவில் தேர்தல் ஆணையம் எங்களுக்கு ஒரு புள்ளிவிவரத்தை வழங்கியது. அடுத்த இரண்டு மணி நேரத்தில் அதாவது இரவு 7.30 மணியளவில், 65 லட்சம் வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். இது உண்மையில் சாத்தியமற்றது. தேர்தல் ஆணையம் சமரசம் செய்யப்பட்டுள்ளது என்பது எங்களுக்கு மிகவும் தெளிவாகத் தெரிகிறது. அமைப்பில் ஏதோ மிகப் பெரிய தவறு உள்ளது" என்று குற்றம் சாட்டி இருந்தார்.
இந்நிலையில் இதற்கு தேர்தல் கமிஷன் கண்டனம் தெரிவித்து உள்ளது. ராகுல் காந்தியின் இந்த தவறான தகவல் சட்டத்தை அவமதிப்பதுடன், அரசியல் மற்றும் தேர்தல் பணியாளர்களுக்கு வேதனை அளிப்பதாக உள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.
வாக்காளர்கள் தங்களுக்கு எதிராக தீர்ப்பு அளித்தால் தேர்தல் கமிஷன் சமரசத்துக்கு உள்ளாகி இருப்பதாக அவதுறு செய்ய முயற்சி நடப்பதாகவும் கூறியுள்ளது.
மராட்டிய தேர்தலில் ஒரு மணி நேரத்துக்கு சராசரியாக 58 லட்சம் வாக்காளர்கள் ஓட்டுப்போட்டதாகவும், இதன் மூலம் 2 மணி நேரத்தில் 65 லட்சம் பேர் வாக்களிப்பது சாத்தியம்தான் என்றும் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்து இருக்கிறது.