ஆண்டுக்கு ரூ.14 லட்சம் லாபம் தரும் ஆர்கானிக் பப்பாளி!

1 week ago 4

தேனி மாவட்டத்தின் கம்பம் பள்ளத்தாக்கை இயற்கையின் கொடை என்றே கூறலாம். திராட்சை, வாழை, தென்னை என இங்கு விளையும் அனைத்துப் பொருட்களும் மதிப்பு மிக்கவை. அந்த வரிசையில் கூடலூர் பகுதியில் இயற்கை முறையில் ரெட்லேடி, நெம்பர் 15 என்ற இரண்டு வகையான பப்பாளியை சாகுபடி செய்து நல்ல லாபம் பார்த்து வருகிறார் முன்னாள் பள்ளி ஆசிரியரான முருகன். அவரை ஒரு காலைப்பொழுதில் சந்தித்துப் பேசினோம். “கம்பம்தான் எனக்கு சொந்த ஊர். எம்.ஏ., பி.எட்., எம்.பில் படிப்புகளை சென்னையில் முடித்துவிட்டு, கம்பத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்தேன். கொரோனா காலகட்டத்தில் இயற்கை விவசாயம் செய்யலாம் என்ற எண்ணம் தோன்றியதால் ஆசிரியர் வேலையைத் துறந்து விட்டேன். இயற்கை விவசாயம் பற்றி சில ஐடியாக்கள் இருந்தாலும் என்னிடம் சொந்தமாக நிலம் இல்லை. இதனால் கம்பத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் குத்தகை அடிப்படையில் நிலம் கிடைக்குமா? என்று தேடினேன். ஆனால் அங்கு கிடைக்கவில்லை. அப்போது நண்பர் ஒருவர் மூலம் கூடலூரில் நிலம் குத்தகைக்கு இருப்பதாக கேள்விப்பட்டு அங்கு சென்று 4.5 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்தேன். அதில்தான் தற்போது வரை விவசாயம் செய்து வருகிறேன்.

முதலில் 4.5 ஏக்கர் நிலத்திலும் செவ்வாழையைப் பயிர் செய்தேன். அதில் எனக்கு பெரிய அளவில் லாபம் கிடைக்கவில்லை. அதேவேளை நட்டமும் இல்லை. என்ன இருந்தாலும் லாபம் இல்லாமல் ஒரு தொழிலைத் தொடர முடியுமா? அடுத்து என்ன செய்யலாம் என்ற குழப்பத்தில் இருந்தேன். அந்த சமயத்தில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஆர்கானிக் பழ வகைகளை மொத்த விலைக்கு வியாபாரம் செய்யும் எனது நண்பர் குமரேசன் என்பவர் பப்பாளி சாகுபடி செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என ஐடியா கொடுத்தார். அவரது ஆலோசனையின் பேரில்தான் இப்போது பப்பாளி சாகுபடியை செய்து வருகிறேன். நான் தற்போது ரெட்லேடி, நெம்பர் 15 என்ற இரண்டு வகை பப்பாளியை சாகுபடி செய்திருக்கிறேன். நடவுக்கான கன்றுகளை தேனி முழுவதும் தேடினேன். ஆனால் எனக்கு தரமான பப்பாளிக் கன்றுகள் கிடைக்கவில்லை. அதனால் ரெட்லேடி பப்பாளிக் கன்றுகளை பழனியில் இருந்து வாங்கி வந்தேன். நெம்பர் 15 பப்பாளிக் கன்றுகளை கர்நாடகாவில் இருந்து வாங்கி வந்தேன். நெம்பர் 15 கன்று ஒன்றை ரூ.10க்கும், ரெட்லேடி பப்பாளி கன்று ஒன்றை ரூ.16க்கும் வாங்கி வந்து நடவு செய்தேன். ஒரு ஏக்கரில் ரெட்லேடி பப்பாளியை சாகுபடி செய்ய மொத்தம் 1000 கற்றுகள் தேவைப்பட்டது. நெம்பர் 15 ரக பப்பாளி கன்றுகள் 1100 வரை தேவைப்பட்டது. நான் கன்றுகளை வாங்கி வந்தவுடன் நடவு செய்துவிடவில்லை. எந்தவொரு பயிராக இருந்தாலும் அதை நடவு செய்வதற்கு முன்பு நம்மூர் சீதோஷ்ண நிலைக்கு மாற்ற வேண்டும். அதற்காக அவற்றை ஒரு வாரம் வரை நிலத்தில் நடவு செய்யாமல் வைக்க வேண்டும். அதைத்தான் நானும் செய்தேன். முழுக்க முழுக்க இயற்கை விவசாயம் என்பதால் அடியுரமாக நான் நவதானியத்தை மட்டுமே பயன்படுத்தினேன். இவற்றை ஒரு மாதம் வரை வளர்த்து நிலத்தில் மடக்கி உழுது கன்றுகளை நடவு செய்தேன்.

பப்பாளி கன்றுகள் ஒவ்வொன்றும் ஒரு ஜான் உயரத்தில் இருக்கும். இதை நடவு செய்வதற்கு 4 அங்குலம் குழியெடுத்தாலே போதும். நடவு செய்வதற்கு முன்பு, பூச்சிகள் கன்றுகளைத் தாக்காமல் இருக்க குழியில் வேப்பம் புண்ணாக்கும், மண்புழு உரமும் போட்டு நடவு செய்வேன். நடவு செய்த முதல் நாளே சூடோமோனாஸ், டிரைக்கோடெர்மா விரிடியை தண்ணீர் கலந்து செடிகளுக்கு பாய்ச்சுவேன். இதிலிருந்து 15வது நாளில் நிலத்தில் களை எடுப்பேன். இந்த களைகளை தூக்கி வீசாமல் மீண்டும் நிலத்திலேயே போட்டுவிடுவேன். இவை பப்பாளி கன்றுகளுக்கு உரமாக மாறிவிடும். இதே நாளில் கன்றுகளுக்கு மீன் அமிலம் தெளிப்போம். இது கன்றுகளுக்கு நல்ல எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும்.ஒரு மாதம் கழித்து கன்றுகளுக்கு பூச்சிவிரட்டி தெளிப்போம். இதற்கு நான் பெருங்காயக் கரைசல் பயன்படுத்து கிறேன். இந்தப் பெருங்காயக் கரைசலில் பெருங்காயம், சாம்பல், கோமியம் இருக்கும். இதில் பெருங்காயம் செடிகளுக்கு தேவையான மணிச்சத்தை கொடுக்கும். சாம்பல் பொட்டாசியத்தைக் கொடுக்கும். கோமியம் யூரியாவை கொடுக்கும். ஆகவே இவை பூச்சி விரட்டியாக மட்டும் செயல்படாமல் பயிர்களுக்கு நல்ல வளர்ச்சி ஊக்கியாகவும் செயல்படும்.

இரண்டாவது மாதத்தில் அரும்புகள் வரத்தொடங்கிவிடும். இந்த அரும்புகள் அதிகமாக வருவதற்காக ராக் பாஸ்பேட் கொடுப்பேன். எகிப்து நாட்டில் உள்ள ஒரு வகையான பாறைத்தூள்தான் இந்த ராக் பாஸ்பேட். இது மரத்தில் அரும்புகளை அதிகரிக்கச் செய்யும். 2வது மாதத்தில் அரும்பு அதிகமானால் பூ அதிகமாகும். பூ அதிகமானால் 3வது மாதத்தில் பிஞ்சு அதிகரிக்கும். பிஞ்சு அதிகமானால் 4வது மாதத்தில் காய்கள் அதிகரிக்கும். இந்தக் காய்கள் 5வது மாதத்தில் பழங்களாக மாறி அறுவடைக்குத் தயாராகும். அறுவடை செய்த பப்பாளிகளை நானே நேரடியாக வியாபாரிகளுக்கு விற்பனை செய்கிறேன். ஒரு மரத்தில் இருந்து ஆண்டொன்றுக்கு 100 கிலோ பப்பாளி மகசூலாகக் கிடைக்கும். ஒரு ஏக்கருக்கு சராசரியாக 100 டன் பப்பாளி கிடைக்கும். ஒரு கிலோ பப்பாளி சராசரியாக ரூ.10க்கு விற்பனையாகிறது. அந்த வகையில் எனக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.10 லட்சம் வருமானமாக கிடைக்கிறது. இதில் ஆட்கூலி, ஏற்றுமதிச் செலவு, உரச்செலவு ரூ.3 லட்சம் போக ரூ.7 லட்சம் ஏக்கருக்கு லாபமாக கிடைக்கிறது. இதுவரையில் ரெட்லேடியில் இருந்து மட்டுமே அறுவடை செய்து விற்பனை செய்து வருகிறேன். 2.5 ஏக்கரில் நெம்பர் 15 பப்பாளி கன்றுகள் வைத்து 3 மாதங்கள் மட்டுமே ஆகிறது. ரெட்லேடி பப்பாளி ரகத்தில் 2 ஏக்கரில் ஒரு ஆண்டுக்கு ரூ.14 லட்சம் லாபமாக கிடைத்தது. அதேபோல நெம்பர் 15 ரகத்திலும் நல்ல லாபம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்’’ என நம்பிக்கையுடன் கூறி புன்னகைக்கிறார்.
தொடர்புக்கு:
முருகன்: 99405 91935.

வைகாசி மாதமும்… பூசணி சாகுபடியும்!

சித்திரை மாதத்தில் வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருக்கும். அதனால் கோடை வெப்பம் காரணமாக பயிர் சாகுபடி செய்ய சில சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். புதிதாக பயிர் சாகுபடி செய்தாலும் அதிக சூட்டின் காரணமாக விதைகளும், பயிர்களும் கருகிவிடும். வைகாசி மாதத்தில் காற்றின் வெப்பம் குறைய ஆரம்பிக்கும். இதனால் வெப்பம் தணிந்து ஓரளவிற்கு குளிர்ச்சியான காலநிலை நிலவும். ஆங்காங்கே ஒரு சில இடங்களில் வெப்பச் சலனம் காரணமாக மழை பெய்யும். இந்த சீசனில் பயிர் சாகுபடி செய்தால் நடவு செய்யப் படும் பயிர்கள் அனைத்துமே வேர்பிடித்து நன்கு வளரும். அதனால் வைகாசியில் செடி முருங்கை, பூசணி உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்யலாம். வைகாசி பட்டத்திற்கு பூசணி மிகவும் ஏற்றது. இத்தகைய பூசணி விதைகளை விதைப்பதற்கு முன்பு விதைப்புக்குழிகளில் நீரூற்ற வேண்டும். விதைத்த அடுத்த நாளிலும் நீரூற்ற வேண்டும். முளைப்புத்
திறன் வந்தவுடன் வாய்க்கால்களின் மூலம் வாரம் ஒருமுறை நீர் பாய்ச்சி முறையாக பராமரிக்க வேண்டும். கொடிகளில் பெண் பூக்கள் அதிகம் தோன்றி பூசணிக்காய்கள் 90வது நாளில் அறுவடைக்கு தயாராகும். அதில் இருந்து நாம் மகசூல் எடுக்க ஆரம்பிக்கலாம்.

The post ஆண்டுக்கு ரூ.14 லட்சம் லாபம் தரும் ஆர்கானிக் பப்பாளி! appeared first on Dinakaran.

Read Entire Article