காலே,
இலங்கை - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த இலங்கை தனது முதல் இன்னிங்சில் 257 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இலங்கை தரப்பில் அதிகபட்சமாக குசல் மெண்டிஸ் 85 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா தரப்பில் மிட்செல் ஸ்டார்க், குனமென், நாதன் லயன் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு ஸ்டீவ் சுமித் மற்றும் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி சதமடித்து அசத்தினர். இதன் மூலம் ஆஸ்திரேலியா 2ம் நாள் முடிவில் 80 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 330 ரன்கள் குவித்துள்ளது. இதன் மூலம் ஆஸ்திரேலியா தற்போது வரை 73 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. அலெக்ஸ் கேரி 139 ரன்களுடனும், ஸ்டீவ் சுமித் 120 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இந்த இன்னிங்சில் சதம் அடித்ததன் மூலம் அலெக்ஸ் கேரி மாபெரும் சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
அதன் விவரம் பின்வருமாறு:-
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஆசிய மண்ணில் சதம் அடித்த 2-வது ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் என்ற மாபெரும் சாதனையை அலெக்ஸ் கேரி படைத்துள்ளார்.
இதற்கு முன்னர் ஆஸ்திரேலியா தரப்பில் விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிறிஸ்ட் மட்டுமே ஆசிய மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்திருந்தார். தற்போது அலெக்ஸ் கேரி 2-வது விக்கெட் கீப்பராக அந்த சாதனையை படைத்துள்ளார்.