ஆசர்கானா சுரங்க நடைபாதையை இலகு ரக வாகனங்கள் செல்லும் சுரங்கப்பாதையாக மாற்ற முடிவு: அமைச்சர்கள் ஆய்வு

4 months ago 19

ஆலந்தூர்: பயனற்ற நிலையில் உள்ள ஆசர்கானா சுரங்க நடைபாதையை இலகு ரக வாகனம் செல்லும் சுரங்கப்பாதையாக மாற்றுவது தொடர்பாக, அமைச்சர்கள் ஆய்வு செய்தனர். ஆலந்தூரில் இருந்து ஜி.எஸ்.டி.சாலையை பொதுமக்கள் கடக்க வசதியாக ஆசர்கானா சந்திப்பில் கடந்த 2005ம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலை துறை மூலம் சுரங்க நடைபாதை அமைக்கப்பட்டது. 13 ஆண்டுகள் இதனை மக்கள் பயன்படுத்தி வந்தனர்.

ஆலந்தூர், மெட்ரோ ரயில் சேவை தொடங்கிய போது ஜி.எஸ்.டி சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்திற்கு பயணிகள் செல்ல சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் மூலம் ரூ.9.07 கோடி மதிப்பீட்டில் லிப்ட் மற்றும் நகரும் படிக்கட்டு வசதிகளுடன் நடைமேம்பாலம் கடந்த 2020ம் ஆண்டு திறக்கப்பட்டது. இதனால், ஆசர்கானா சந்திப்பில் உள்ள சுரங்க நடைபாதையை மக்கள் பயன்படுத்துவதில்லை. தற்போது சமூக விரோதிகள் இந்த சுரங்க நடைபாதையை பயன்படுத்தி வருகின்றனர். எனவே, இந்த சுரங்க நடைபாதையை ஆட்டோ மற்றும் பைக்குகள் செல்லும் சுரங்கப்பாதையாக மாற்றித் தரும்படி ஆலந்தூர் பகுதி மக்கள் அமைச்சர் தா.மோ.அன்பரசனிடம் கோரிக்கை விடுத்தனர்.

அதன்பேரில், நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் நேற்று நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுடன் சென்று இந்த சுரங்க நடைபாதையை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் பயன்பாடின்றி காணப்படும் இந்த சுரங்க நடப்பாதையை இலகுரக வாகனங்கள் செல்லக்கூடிய ஒரு வழி சுரங்கப்பாதையாக மாற்ற நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் எ.வ.வேலு உத்தரவிட்டார்.

The post ஆசர்கானா சுரங்க நடைபாதையை இலகு ரக வாகனங்கள் செல்லும் சுரங்கப்பாதையாக மாற்ற முடிவு: அமைச்சர்கள் ஆய்வு appeared first on Dinakaran.

Read Entire Article