'ஆக்சியம் -4' விண்கலம் விண்ணில் இன்று மாலை ஏவப்படுகிறது

1 day ago 3

சென்னை,

அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து இன்று (புதன்கிழமை) மாலை 5.30 மணிக்கு 'பால்கன்-9' ராக்கெட் மூலம் 'ஆக்சியம் ஸ்பேஸ்' என்னும் தனியார் நிறுவனத்தின் 'ஆக்சியம் -4' மனித விண்வெளி பயணத்திற்கான 'ஸ்பேஸ் எக்ஸ்' டிராகன் விண்கலம் விண்ணில் ஏவப்படுகிறது.

இதன் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா செல்கிறார். இதனையடுத்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:-

இது எனக்கு ஒரு கனவு வேலையாக இருக்கிறது. விண்வெளி வீரரின் தேர்வு மையத்தில் விண்ணப்பிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் விளைவாக இப்போது இங்கே இருக்கிறேன். எனக்கு கிடைத்த வாய்ப்பை பெருமையாக கருதுகிறேன். நாங்கள் அமெரிக்காவில் ஆக்சியத்திற்கு வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்புதான் நான் பயணம் செய்ய இருப்பதை அறிந்தேன். நான் இங்கு இருப்பதில் மிகவும் உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன். ஏனென்றால் இது உண்மையில் விண்வெளிக்கு பறக்க எனக்கு ஒரு வாய்ப்பாகும்.

கடந்த ஆண்டு எனக்கு மாற்றத்தை ஏற்படுத்திய ஆண்டாக இருந்தது. என்னுடைய உற்சாகத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை. விண்வெளிக்குச் செல்லும்போது, வெறும் கருவிகள் மற்றும் உபகரணங்களை மட்டுமல்ல, கோடிக்கணக்கான இதயங்களின் நம்பிக்கைகளையும் கனவுகளையும் சுமந்து செல்கிறேன். எங்கள் பணியின் வெற்றிக்காக அனைத்து இந்தியர்களும் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Read Entire Article