ஆக்சியம்-4 மிஷன்: இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவின் விண்வெளி பயணம் மீண்டும் ஒத்திவைப்பு!!

1 day ago 5

வாஷிங்டன்: அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து இன்று மாலை 5.30 மணிக்கு பால்கன்-9 ராக்கெட் மூலம் ஆக்சியம் ஸ்பேஸ் என்னும் தனியார் நிறுவனத்தின் ஆக்சியம்-4 மனித விண்வெளி பயணத்திற்கான ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம் விண்ணில் ஏவப்பட இருந்தது. இந்த நிலையில் ஆக்சியம்-4 மிஷன் மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

முன்னதாக நேற்று இந்த விண்கலம் ஏவப்பட இருந்த நிலையில், மோசமான வானிலை காரணமாக இன்று மாலை 5.30 மணிக்கு விண்ணில் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஃபால்கன் 9 ராக்கெட்டில் திரவ ஆக்சிஜன் கசிவால், இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேரின் விண்வெளி பயணம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியதாவது; பூஸ்டர் ஆய்வுகளின்போது திரவ ஆக்சிஜன் கசிவு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த கசிவை சரிசெய்ய ஸ்பேஸ் எக்ஸ் குழுவுக்கு கூடுதல் நேரம் தேவைப்படுகிறது. இதன் காரணமாக பால்கன்-9 ஏவுதல் ஒத்திவைக்கப்படுகிறது. புதிய ஏவுதல் தேதியை விரைவில் பகிர்ந்து கொள்வோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக்சியம்-4 மிஷன் மூலம் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா, அமெரிக்காவை சேர்ந்த மிஷன் கமாண்டர் பெக்கி விட்சன், ஹங்கேரியை சேர்ந்த விண்வெளி நிபுணர் திபோர் கபு மற்றும் போலந்தை சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி ஆகியோர் சர்வதேச விண்வெளி மையத்திற்கு செல்கின்றனர். இக்குழுவினர் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு சென்று 14 நாட்கள் தங்கியிருந்து விண்வெளியில் வேளாண் தொடர்பான ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். பயிறு, வெந்தய கீரை செடிகள் விண்வெளியில் வளர்ப்பது தொடர்பாக ஆய்வு செய்கின்றனர். கடைசியாக 1984ல் சோவியத் ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம் மூலம் இந்திய வீரர் ராகேஷ் சர்மா விண்வெளி பயணம் மேற்கொண்டார். அதன்பின் 41 ஆண்டுக்குப் பிறகு சுபன்ஷு விண்வெளி சென்று சாதிக்க உள்ளார் என்பது குறிப்பிட்டுள்ளது.

The post ஆக்சியம்-4 மிஷன்: இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவின் விண்வெளி பயணம் மீண்டும் ஒத்திவைப்பு!! appeared first on Dinakaran.

Read Entire Article