சென்னை: அறுபடை வீடு ஆன்மிகப் பயணம் மூலம் 2,022 மூத்த குடிமக்கள் பயன்பெற்றுள்ளனர் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். தமிழ் கடவுள் என்று போற்றப்படுகின்ற முருகப் பெருமான் வீற்றிருக்கும் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகியவற்றிற்கு மூத்த குடிமக்கள், ஒரேமுறையாக சென்று தரிசனம் செய்திடும் வகையில் கட்டணமில்லாமல் 60 வயது முதல் 70 வயதிற்குட்பட்ட 200 பக்தர்கள் வீதம் இதுவரை 1,822 மூத்த குடிமக்கள் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
இன்றைய தினம் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, சேலம் ஆகிய மண்டலங்களை சேர்ந்த 200 மூத்த குடிமக்கள் திருத்தணி, சுப்பிரமணிய சுவாமி கோயிலிருந்து சுவாமி தரிசனம் செய்து அறுபடை வீடுகளுக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். இந்த ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்ற மூத்த குடிமக்களுக்கு தங்குமிடம் மற்றும் உணவு வசதிகளுடன் போர்வை, துண்டு, குளியல் சோப், டூத் பிரஷ், பேஸ்ட், முகம் பார்க்கும் கண்ணாடி, தேங்காய் எண்ணெய், சீப்பு போன்ற பொருட்கள் அடங்கிய பயணவழிப் பைகள் வழங்கப்படுகின்றன.
மேலும், அவர்களுக்கு உதவியாக செயல் அலுவலர்கள், திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் மருத்துவ குழுவினரும் உடன் சென்றனர். ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்ற மூத்த குடிமக்கள் பயணம் சிறப்பாகவும், மிகுந்த மனநிறைவை தந்ததாகவும் தெரிவித்திருந்தனர். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் கட்டணமில்லா அறுபடை வீடு ஆன்மிகப் பயணத்தின் மூலம் 2024-2025 ஆம் நிதியாண்டில் அரசு நிதியில் 2,022 மூத்த குடிமக்கள் பயன்பெற்றுள்ளனர் என்று கூறினார்.
The post அறுபடை வீடு ஆன்மிகப் பயணம் மூலம் 2,022 மூத்த குடிமக்கள் பயன்: அமைச்சர் சேகர்பாபு தகவல் appeared first on Dinakaran.