அர்ஜுன் சம்பத் மகனுக்கு 28-ந்தேதி வரை நீதிமன்ற காவல்

7 months ago 21

கோவை,

ஈஷா யோகா மையம் குறித்து அவதூறு பரப்பி வருவதாக நக்கீரன் கோபாலை கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் கடந்த மாதம் 27-ந் தேதி கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் அந்த கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத்தின் மகனும், இளைஞர் அணி தலைவருமான ஓம்கார் பாலாஜி பேசும்போது, நக்கீரன் கோபாலுக்கு மிரட்டல் விடுத்ததாக கூறி தி.மு.க.வைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் அப்துல்ஜலீல் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார்.

இதன்பேரில் ஓம்கார் பாலாஜி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதற்கிடையில் அவர் முன்ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். ஆனால் அவருக்கு முன் ஜாமீன் வழங்கப்படவில்லை. இதைத்தொடர்ந்து ஓம்கார் பாலாஜியை சென்னை போலீசார் கைது செய்து, ரேஸ்கோர்ஸ் போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அவர் கோவை அழைத்து வரப்பட்டார்.

இதைதொடர்ந்து ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் ஓம்கார் பாலாஜி கோவை 3-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நீதிபதி அருண்குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நீதிபதி, அவரை வருகிற 28-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து ஓம்கார் பாலாஜி கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.

Read Entire Article