ஆட்டையாம்பட்டி, ஜூன் 4:வீரபாண்டி ஒன்றியம், ராக்கிப்பட்டியில் நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோடை விடுமுறை முடிந்து திறக்கப்பட்ட இப்பள்ளியில், 64 குழந்தைகள் சத்துணவு சாப்பிட்டு வருகின்றனர். நேற்று முன்தினம், மதிய உணவு தயாரிக்க, சத்துணவு அமைப்பாளர் ராதா வந்து சத்துணவு மையத்தை திறந்து பார்த்த போது, சமையல் பொருட்கள் அனைத்தும் திருடப்பட்டது தெரிய வந்தது. இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி, ஆட்டையாம்பட்டி போலீசில் புகாரளித்தார். இதில் 13 கிலோ அரிசி, 10 கிலோ துவரம் பருப்பு, 12 கிலோ சுண்டல், 320 முட்டைகள், 8 லிட்டர் சமையல் எண்ணெய் மற்றும் சாப்பாடு தட்டுகள், சில்வர் வாலி, மூடி போட்ட அலுமினிய வாணலி உள்ளிட்ட பொருட்கள் திருடு போனதாக புகாரளித்தார். புகாரை பெற்ற ஆட்டையாம்பட்டி இன்ஸ்பெக்டர் விதுன்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர விசாரணை நடத்தினார். இதில் பள்ளி அருகில் பல நாட்களாக தங்கி இருந்த ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த மதர்நாயக் மகன் சிகாந்த் (30) என்பவர், திருடப்பட்ட பொருட்களை வைத்து சமையல் செய்து கொண்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
The post அரிசி, பருப்பு திருடிய வடமாநில வாலிபர் கைது appeared first on Dinakaran.