அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவர்களை கூடுதலாக நியமிக்க வேண்டும்: அமைச்சரிடம் கோரிக்கை மனு

4 months ago 10

திருவள்ளூர்: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியத்தை நேற்று முன்தினம் சமூக ஆர்வலர் செஞ்சி ஜி.ஸ்ரீதர் என்பவர் நேரில் சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்தார். அதில் கூறியிருந்ததாவது: திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மாவட்டத்தின் தலைமை மருத்துவமனையாக உள்ளது. இங்கு சிறப்பான உயர் சிகிச்சை கிடைப்பதால் திருவள்ளூர் மாவட்டம் மட்டுமல்லாது ஆந்திர மாநிலம், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்தும் தினமும் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புறநோயாளிகள் மற்றும் கர்ப்பிணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், இங்கு மாதம் ஒன்றுக்கு சுமார் 900க்கும் மேற்பட்ட பெண்களுக்கு அறுவை சிகிச்சை மற்றும் சுகப்பிரசவம் பார்க்கப்படுகிறது.

இந்த மருத்துவமனை மாவட்டத்தின் தலைமை மருத்துவமனை என்பதால் மாவட்டத்திற்கு உட்பட்ட மற்றும் அருகில் உள்ள மாவட்டத்தின் ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்தும் கர்ப்பிணிகள் உயர்சிகிச்சைக்காக இந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இங்கு மகப்பேறு மருத்துவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதன் காரணமாக கர்ப்பிணிகள் வெகு நேரமாக வலியுடன் காத்திருக்கும் அவலநிலை நிலவுகிறது. இந்த மருத்துவமனையில் 6 மகப்பேறு மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர். இதில் 2 மகப்பேறு மருத்துவர்களை தற்காலிகமாக வேறு மருத்துவமனைக்கு சிகிச்சை அளிக்க அனுப்புகின்றனர். ஆனால் 10க்கும் மேற்பட்ட மகப்பேறு மருத்துவர்கள் இங்கு தேவை உள்ளதாக தெரிகிறது. எனவே அமைச்சர் இந்த கோரிக்கையை ஏற்று தாய், சேய் ஆகிய இரு உயிர்களின் நலன்கருதி கூடுதலாக மகப்பேறு மருத்துவர்களை நியமிக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

The post அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவர்களை கூடுதலாக நியமிக்க வேண்டும்: அமைச்சரிடம் கோரிக்கை மனு appeared first on Dinakaran.

Read Entire Article