அரசு பொதுத்தேர்வு, திறனாய்வு தேர்வுகளில் சாதித்த தாந்தாணி அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

4 days ago 8

அறந்தாங்கி, ஜூன் 5: அறந்தாங்கி அருகே தாந்தாணி அரசு மேல்நிலைப்பள்ளியில், முன்னாள் மாணவர்கள் சார்பில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

தமிழகத்தில் பொதுத் தேர்வு முடிவுகள் வெளிவந்ததையடுத்து, அடுத்தடுத்த படிப்பில் சேர்வதற்கு மாணவர்கள் ஒருபுறம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றனர். மறுபுறம் அடுத்த கல்வியாண்டு துவங்கியதையடுத்து, அரசு பள்ளிகளுக்கான உள்கட்டமைப்பு வசதி மேம்பாட்டு பணிகளில் கல்வித்துறை, கல்விக்குழு, சமூக ஆர்வலர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால், பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை அமைத்தல், நவீன முறையில் தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும் வகையில் கட்டிட வசதிகளுடன் பள்ளிக்கட்டிடம் துவக்கி வைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அதில், அறந்தாங்கி அடுத்த தாந்தாணி அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சார்பில் 10ம் வகுப்பு, 11ம் வகுப்பு, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று, சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. அதில், கணித பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண்கள் எடுத்த மாணவன், ஊரக திறனாய்வுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவனுக்கும் ஊக்கத்தொகைகளும் சிறப்புப் பரிசுகளும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர்கள் கழகத்தினர் முன்னாள் பள்ளி மாணவர்கள் பலர் கலந்தா கொண்டனர்.

நிகழ்ச்சியில், பள்ளி தலைமையாசிரியர் திருமேனிநாதன் பேசியதாவது: ஆண்டுதோறும் மாவட்டத்தின் சிறந்த பள்ளியாக நம் பள்ளி சிறந்து விளங்க நமது ஆசிரியர்கள் தான் காரணம். மேலும், பள்ளியின் முன்னாள் மாணவர்களின் இதுபோன்ற முன்னெடுப்புகள் மாணவர்களிடம் உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து மாணவர்களின் நலனிலும், பள்ளியின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதிலும் ஓவ்வொரு ஆண்டும் தொடர்ந்து சிறிய பங்களிப்பை நம் முன்னாள் மாணவர்கள் வழங்க வேண்டும். பள்ளியிலேயே மாணவர்களுக்கு உயர்கல்விக்கு, போட்டித் தேர்வுகளுக்கு வழிகாட்டுதல்கள் தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது.

வருங்காலங்களில் இவை அதிகரிக்கப்படும். அதேபோன்று, மாணவர்களை பல்வேறு விளையாட்டுகளில் கலந்துகொள்ள வைப்பதிலும் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம். அதற்கான ஏற்பாடுகளைச் செய்கிறோம் என்றார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை தாந்தாணி பள்ளி முன்னாள் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

The post அரசு பொதுத்தேர்வு, திறனாய்வு தேர்வுகளில் சாதித்த தாந்தாணி அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு appeared first on Dinakaran.

Read Entire Article