அரியலூர்: அரசு பேருந்துகளில் தமிழ்நாடு என்ற பெயர் 2012ல் அதிமுக ஆட்சியில் நீக்கப்பட்டது என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். அரியலூரில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களுக்குப் பேட்டியில் கூறியதாவது; பேருந்துகளில் தமிழ்நாடு என்ற பெயரை தற்போது நீக்கியதாக சிலர் சர்ச்சையை கிளப்புகின்றனர். இந்தப் பெயர் மாற்றம் அதிமுக ஆட்சிக் காலத்திலேயே, சுமார் 13 ஆண்டுகளுக்கு முன்பே நிகழ்ந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.
ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த காலத்திலேயே தொடங்கப்பட்ட அரசுப் பேருந்துகளில் பேருந்தின் முன்பக்கத்தில் ‘அரசுப் போக்குவரத்து கழகம்’ என்று மட்டுமே பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. ‘தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம், திருநெல்வேலி’ என்று முழுமையாக எழுதும்போது, பெயர் நீளமாகவும், படிக்கக் வசதியாக இல்லை என்று கூறி அதிமுக ஆட்சியில் மாற்றப்பட்டது.
சிலர் அதிமுக ஆட்சியில் நடந்ததை தற்போது நடந்தது போல சிலர் சர்ச்சை கிளப்பி கொண்டிருப்பதாக அமைச்சர் சிவசங்கர் கூறினார். பழைய பேருந்துகள் இன்னும் ஓடிக் கொண்டிருப்பதாகத் தகவல்கள் பரவி வந்தாலும், முதலமைச்சர் பல புதிய பேருந்துகளைத் தொடங்கி வைத்துள்ளதாகவும், மேலும் பல புதிய பேருந்துகளை விரைவில் கொண்டுவர இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட வழித்தடங்களிலும் தற்போது பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு என பெயர் சூட்டியதே திமுக அரசுதான்; யாரும் பாடம் எடுக்க வேண்டாம் என அமைச்சர் சிவசங்கர் கூறினார்.
The post அரசு பேருந்துகளில் தமிழ்நாடு என்ற பெயர் 2012ல் அதிமுக ஆட்சியில் நீக்கப்பட்டது: அமைச்சர் சிவசங்கர் பேட்டி appeared first on Dinakaran.