ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில், ஊட்டி மற்றும் குன்னூர் வட்டங்களில், அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளிகளில், தேசிய பழங்குடியினர் ஆணைய உறுப்பினர் ஸ்ரீ ஜடோத்து ஹூசைன் ஆய்வு மேற்கொண்டு, அங்கு பயிலும் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
தேசிய பழங்குடியினர் ஆணைய உறுப்பினர் ஸ்ரீ ஜடோத்து ஹூசைன் ஊட்டி அருகேயுள்ள எம்.பாலாடா அரசு ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப்பள்ளியில் மரக்கன்றுகளை நடவு செய்தார்.
அதனைதொடர்ந்து, பள்ளியின் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, அங்கு பயிலும் மாணவர்களுடன் கலந்துரையாடி, கற்றல் திறன் குறித்து கேட்டறிந்து, பள்ளி மாணவ, மாணவிகளின் விடுதியின் அடிப்படை வசதிகள் மற்றும் சமையில் அறையில் பொருட்களின் இருப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர், அரசு ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப்பள்ளியில், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில், பழங்குடியினர் மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி செய்யும் பொருட்களையும், மாவட்டத்தில் விளையக்கூடிய பழ வகைகளையும் தேசிய பழங்குடியினர் ஆணைய உறுப்பினர் ஸ்ரீ ஜடோத்து ஹூசைன் பார்வையிட்டார்.
தொடர்ந்து, எம்.பாலாடாவில் உள்ள பழங்குடியினர் ஆராய்ச்சி மையம் மற்றும் பழங்குடியினர் ஆராய்ச்சி மையத்தை ஆய்வு மேற்கொண்டு, அருங்காட்சியத்தில் அமைந்துள்ள பழங்குடியின மக்களின் பாரம்பரியம், கலாச்சாரம் அவர்களின் வாழ்க்கை முறைகள் குறித்து கேட்டறிந்து, அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டுள்ள பண்டைய பழங்குடியினரின் கைவினை பொருட்கள் வீட்டு உபயோக பொருட்கள், மாதிரி வீடு மற்றும் மாதிரி சிலைகளை ஆணைய உறுப்பினர் ஸ்ரீ ஜடோத்து ஹூசைன் பார்வையிட்டார்.
முன்னதாக, குன்னூர் வட்டாரத்திற்கு உட்பட்ட மேலூர் ஊராட்சி நெடுகல்கொம்பை உண்டு உறைவிடப்பள்ளியில் பழங்குடியின மக்களை நேரில் சந்தித்து கோரிக்கைகளை கேட்டறிந்து, உண்டு உறைவிட பள்ளியில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, அங்கு பயிலும் பழங்குடியின மாணவர்களுடன் தேசிய பழங்குடியினர் ஆணைய உறுப்பினர் ஸ்ரீ ஜடோத்து ஹூசைன் கலந்துரையாடி, அவர்களுக்கு ரெயின் கோட் வழங்கினார்.
இந்நிகழ்வுகளின் போது, தேசிய பழங்குடியினர் ஆணைய இயக்குநர் கல்யாண் ரெட்டி, ஊட்டி சட்டமன்ற உறுப்பினர் கணேஷ், தனிச்செயலாளர் ஸ்ரீ அசோக்குமார் லக்கரசு, மாவட்ட வன அலுவலர் கௌதம், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கௌசிக், குன்னூர் சார் ஆட்சியர் சங்கீதா, உதகை வருவாய் கோட்டாட்சியர் சதீஷ்குமார், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் பீட்டர் ஞானராஜ், பழங்குடியினர் ஆராய்ச்சி மைய இயக்குநர் (பொறுப்பு) உதயகுமார், தாட்கோ (பொது மேலாளர்) ஆர்ணி பேர்ள், வட்டாட்சியர்கள் ஜவகர், சங்கர் கணேஷ், பழங்குடியின மக்கள் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளிகளில் தேசிய பழங்குடியினர் ஆணைய உறுப்பினர் ஆய்வு appeared first on Dinakaran.