
சென்னை,
தமிழக அரசால் செயல்படுத்தப்படும் காலை உணவு திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பள்ளிகளில் மாணவர்கள் வருகை பதிவு அதிகரித்துள்ளது. கற்றல் திறன் மேம்பட்டுள்ளது, உடல் நலம் காக்கப்பட்டுள்ளது என இத் திட்டத்தால் பல பயன்கள் நிகழ்ந்து வருகின்றன.
இந்தநிலையில், தமிழக சட்டசபையின் இன்றைய அலுவல் தொடங்கி நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் தொகை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்த பேசிய அமைச்சர் கீதாஜீவன்,
மகளிர் உரிமைத் துறை, வீட்டு மனை பட்டா, விடியல் பயணம் என்று பெண்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை முதல்-அமைச்சர் செயல்படுத்தி வருகிறார். மேலும், புதுமைப்பெண் திட்டத்திற்கு இதுவரை 721 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து செலவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பள்ளி சீருடைகள் தைக்க தையல் கூலி உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு எடை குறைவாக உள்ள 92 ஆயிரம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டு அந்த குழந்தைகள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர், குழந்தைகள் நல மையங்கள் எல்லாம் ஸ்மார்ட் மையங்களாக மாற்றப்பட்டு வருகிறது.
காலை உணவு திட்டத்தால் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துள்ளது. குழந்தைகளின் ஊட்டச்சத்து அதிகரித்து, குழந்தைகள் ஆரோக்கியமாக உள்ளனர். வரும் கல்வி ஆண்டு முதல் அரசு பள்ளிகளில் அரசின் காலை உணவு திட்டத்தில் உப்புமாவுக்கு பதிலாக சாம்பார் உடன் பொங்கல் வழங்கப்படும் என்றார்.