அரசு கல்லூரியில் பொதுக்கலந்தாய்வில் பங்கேற்க மாணவ, மாணவிகள் குவிந்தனர்

4 days ago 2

கோவை, ஜூன் 5: கோவை அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ. தமிழ், ஆங்கிலம், வரலாறு, பி.எஸ்சி. இயற்பியல், வேதியியல், கணிதம், பி.காம். உள்ளிட்ட 23 இளநிலை படிப்புகள் வழங்கப்படுகிறது. இதில், நடப்பாண்டில் 1,727 இடங்கள் நிரப்பப்பட உள்ளது.

இதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் கடந்த மாதம் 7ம் தேதி முதல் 30ம் தேதி வரை விநியோகம் செய்யப்பட்டது. இதற்கு 33 ஆயிரத்து 753 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து உள்ளனர். இதையடுத்து, மாணவர்களின் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள், என்சிசி, விளையாட்டு உள்ளிட்ட சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு கடந்த 2,3 ஆகிய இரண்டு நாட்கள் நடந்தது. இந்த கலந்தாய்வின் மூலம் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான இடங்கள் நிரப்பப்பட்டது.

இதனை தொடர்ந்து பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நேற்று துவங்கியது. இதில், பங்கேற்க ஏராளமான மாணவ, மாணவிகள் கல்லூரி வளாகத்தில் குவிந்தனர். கலந்தாய்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடந்தது. இதில், பெரும்பாலான இடங்கள் நிரம்பியது. தொடர்ந்து இன்று தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வு நடக்கிறது. மேலும், புலியகுளம் மகளிர் அரசு கல்லூரியில் பொதுப்பிரிவு மாணவிகளுக்கான கலந்தாய்வில் வெளி மாவட்டங்களை சேர்ந்த மாணவிகள் பலர் பங்கேற்றனர்.

மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடந்தது. தொடர்ந்து இன்றும் கலந்தாய்வு நடக்கிறது.

The post அரசு கல்லூரியில் பொதுக்கலந்தாய்வில் பங்கேற்க மாணவ, மாணவிகள் குவிந்தனர் appeared first on Dinakaran.

Read Entire Article