அரசு கலைக்கல்லூரி மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடக்கம்: பி.காம் படிப்புக்கு கடும் மவுசு

1 day ago 6

சென்னை,

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை மாணவர் சேர்க்கைக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு நேற்று தொடங்கியது. பி.காம். மற்றும் கம்ப்யூட்டர் பிரிவு பாடங்களுக்கு மாணவ, மாணவிகள் மத்தியில் நல்ல வரவேற்பு ஏற்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் மே 8-ந் தேதி வெளியானது. இதில் 95.03 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இதனைத்தொடர்ந்து, 2025-2026-ம் கல்வி ஆண்டில் தமிழகத்தில் உள்ள 176 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள பி.ஏ., பி.எஸ்சி., பி.காம்., பி.பி.ஏ., பி.பி.எம்., பி.சி.ஏ., உள்ளிட்ட இளங்கலை பட்டப்படிப்புகளில் ஒரு லட்சத்து 7 ஆயிரம் இடங்கள் உள்ளன. இதில், மாணவர்கள் சேருவதற்கான ஒருங்கிணைந்த ஆன்லைன் விண்ணப்பம் கடந்த மாதம் 7-ந் தேதி தொடங்கி 27-ந் தேதி வரை பெறப்பட்டது. தொடர்ந்து, மாணவர்கள் பல்வேறு துறை சார்ந்த படிப்புகளில் சேர ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த கல்லூரிகளில் 1 லட்சத்து 84 ஆயிரத்து 762 மாணவ, மாணவிகள் கட்டணம் செலுத்தி விண்ணப்பித்தனர்.

இதனையடுத்து மாணவர்களின் மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மாணவர்களுக்கு கலந்தாய்வின் மூலம் அவர்கள் விரும்பும் படிப்புகளில் இடம் ஒதுக்குவதற்காக அழைக்கப்பட்டனர். தொடர்ந்து, மாணவர்கள் கல்லூரிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை செலுத்தி சேர்க்கையை உறுதி செய்யவேண்டும். அந்த வகையில், தேசிய மாணவர் படை, முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள், பாதுகாப்பு துறை, அந்தமான் நிகோபர் தீவுகளை சேர்ந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட சிறப்பு பிரிவினருக்கு கலந்தாய்வு நேற்று காலை 9 மணி அளவில் தொடங்கியது.

இதில் திரளான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு, சான்றிதழ்களை அந்தந்த கல்லூரிகளில் அளித்து விரும்பிய பட்டப்படிப்புகளை தேர்வு செய்தனர். குறிப்பாக, பி.காம்., கம்ப்யூட்டர் சார்ந்த படிப்புகளில் சேர்ந்து படிக்கவே அதிகம் பேர் விண்ணப்பித்து சேர்ந்து வருகின்றனர்.

குறிப்பாக சென்னை ராணி மேரி கல்லூரியில் முதல் நாள் கலந்தாய்வில் மாற்றுத்திறனாளிகள் 20 பேர் மற்றும் பிற பிரிவுகளை சேர்ந்த 20 பேர் என 40 பேர் பி.காம்., படிப்பை தேர்வு செய்தனர். தொடர்ந்து முதல்கட்ட கலந்தாய்வு 6-ந் தேதி வரை நடக்கிறது. அதற்கு பிறகு 2-ம் கட்ட கலந்தாய்வு நடக்க இருக்கிறது. வருகிற 16-ந் தேதி 2 மற்றும் 3-ம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகளும், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்பு வருகிற 30-ந் தேதியும் தொடங்குகிறது. கலந்தாய்வு குறித்த விவரங்கள் மாணவர்கள் விண்ணப்பிக்கும்போது அளித்த இ-மெயில் மற்றும் செல்போன் எண்களுக்கு தகவல் பகிரப்படும் என்று கல்லூரி கல்வி இயக்கக அதிகாரிகள் கூறினர்.

Read Entire Article