
சென்னை,
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பப் பதிவு 7.05.2025 அன்று தொடங்கி, இன்றுடன் (27.05.2025) முடிவடைவதால் மாணவர்களின் நலன் கருதி மீண்டும் 30.05.2025 அன்று தொடங்கும் என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் அவர்கள் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-
"அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 2025-26-ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் 07.05.2025 அன்று முதல் 27.05.2025 வரை, www.tngasa.in என்ற இணையதள வாயிலாக பெறப்பட்டது. இதுவரை 2,25,705 விண்ணப்பங்கள் இணைய தளம் வாயிலாக பதிவு செய்யப்பட்டுள்ளன. 1,08,619 மாணவிகள், 76,065 மாணவர்கள் மற்றும் 78 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 1,84,762 மாணாக்கர்கள் கட்டணம் செலுத்தி உள்ளனர்.
சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் 29.05.2025 அன்று கல்லூரிகளில் வெளியிடப்படும். பொதுப்பிரிவினருக்கான தரவரிசைப் பட்டியல் 30.05.2025 அன்று கல்லூரிகளில் வெளியிடப்படும். கல்லூரித் தகவல் பலகைகளில் தரவரிசைப் பட்டியல்கள் ஒட்டப்பட்டு, கல்லூரி இணைய தளங்களிலும் வெளியிடப்படும். மேலும், 176 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் சிறப்பு ஒதுக்கீட்டுப் பிரிவு மற்றும் பொது கலந்தாய்விற்கான தகவல்கள், குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வாயிலாக மாணவர்களுக்கு அந்தந்த கல்லூரிகளிலிருந்து தெரிவிக்கப்படும்.
27.05.2025-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கத் தவறிய மாணவர்கள் மற்றும் துணைத்தேர்வு எழுதும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் மீண்டும் 30.05.2025 அன்று முதல் இணையதளம் வாயிலாக விண்ணப்பப் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் கீழ்குறிப்பிட்டுள்ளவாறு 30.06.2025-இல் துவங்கும்;-
29.05.2025 - சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கான தர வரிசைப் பட்டியல் கல்லூரிகளின் இணைய தளங்களிலும், கல்லூரி தகவல் பலகைகளிலும் வெளியிடப்படும்.
30.05.2025 - பொதுப்பிரிவினருக்கான தரவரிசைப் பட்டியல் கல்லூரிகளின் இணைய தளங்களிலும், கல்லூரி தகவல் பலகைகளிலும் வெளியிடப்படும்.
02.06.2025 மற்றும் 03.06.2025 - சிறப்பு ஒதுக்கீட்டுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு (மாற்றுத் திறனாளிகள் / விளையாட்டு வீரர்கள் / முன்னாள் ராணுவத்தினர் / அந்தமான், நிகோபார் தமிழ் மாணவர்கள் / தேசிய மாணவர் படை/ பாதுகாப்புப் படைவீரர்கள்)
04.06.2025 - முதல் பொதுக் கலந்தாய்வு
14.06.2025 - வரை தொடர் கலந்தாய்வு மற்றும் மாணவர் சேர்க்கை
30.06.2025 - முதலாம் ஆண்டு மாணாக்கர்களுக்கு வகுப்புகள் துவங்கும் நாள்."
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.