சென்னை: திருவல்லிக்கேணி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.78,410 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழகம் முழுவதும் முகர்த்த நாட்களில் அதிகளவில் சார் பதிவாளர் அலுவலகங்களில் சொத்து அவணங்களை பொதுமக்கள் பதிவு செய்து வருகிறனர். அந்த வகையில் நேற்று முன்தினம் முகர்த்த நாள் என்பதால் அதிகளவில் சார் பதிவாளர் அலுவலகங்களில் பொதுமக்கள் வாங்கிய தங்களது சொத்துக்களை பதிவு செய்தனர். அந்த வகையில் சென்னை திருவல்லிக்கேணி சார் பதிவாளர் அலுவலகத்தில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்பட்டாக பொதுமக்களிடம் இருந்து லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார்கள் வந்தது.
அந்த புகாரின் அடிப்படையில் நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திருவல்லிக்கேணி சார் பதிவாளர் அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது, சார் பதிவாளர் அலுவலகத்தின் கதவுகள் மூடப்பட்டது. அலுவலகத்தில் உள்ளே இருந்த பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் யாரையும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வெளியே விடவில்லை. அதேபோல் வெளியில் இருந்தும் யாரையும் சார் பதிவாளர் அலுவலகத்திற்குள் விடவில்லை.
பின்னர் அதிகாரிகள் சார் பதிவாளர் அறை மற்றும் அலுவலர்கள் மேஜை மற்றும் அவர்களின் உடமைகளை ஆய்வு செய்தனர். மேலும், நேற்று சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட சொத்துக்கள் குறித்தும், அதற்கான அரசு நிர்ணயித்த கட்டண விபரங்களையும் ஒவ்வொன்றாக ஆய்வு செய்தனர். அப்போது கணக்கில் வராத 78,410 ரூபாய் ரொக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட பணம் குறித்து சார் பதிவாளர் மற்றும் அதிகாரிகளிடம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் சிறிது நேரம் திருவல்லிக்கேணி சார் பதிவாளர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
The post அரசு கட்டணத்தை விட கூடுதலாக வசூலித்த புகார் திருவல்லிக்கேணி சார் பதிவாளர் அலுவலகத்தில் அதிரடி சோதனை: கணக்கில் வராத ரூ.78,410 பறிமுதல் appeared first on Dinakaran.