
டெல்லி,
தமிழக மாணவர்களின் கல்வி சார்ந்த பல்வேறு திட்டக்கூறுகளை நிறைவேற்றுவதற்காக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட 2024-25-ஆம் ஆண்டுக்கான நிதி ரூ.2,152 கோடியும் மத்திய அரசு விடுவிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது.
மும்மொழிக்கொள்கையை உள்ளடக்கிய புதிய கல்விக்கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்காவிட்டால் கல்வி நிதி கிடையாது என்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். அவரின் கருத்துக்கு தமிழக அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இதனிடையே, நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு இன்று தொடங்கியது. அப்போது, கல்விக்கு தரவேண்டிய நிதியை மத்திய அரசு விடுவிக்காதது குறித்து தி.மு.க. எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன் கேள்வி எழுப்பினார்.
அப்போது பேசிய மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான், தேசிய கல்விக்கொள்கை மூலம் இந்தி திணிக்கப்படுவதாக தவறாக பரப்புரை செய்யப்படுகிறது. தமிழக மாணவர்களை தி.மு.க. அரசு வஞ்சிக்கிறது' என்றார்.
மத்திய கல்வி மந்திரியின் பதிலை மறுத்து தி.மு.க. எம்.பி.க்கள் மக்களவையில் முழக்கம் எழுப்பினர். இதனால் அவை ஒத்துவைக்கப்பட்டது.
இதன்பின் நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான், அரசியலுக்காக மும்மொழிக்கொள்கையை எதிர்க்கின்றனர். மும்மொழிக்கொள்கையில் தமிழக அரசுக்கு புரிதல் இல்லை. புதிய கல்விக்கொள்கையை எதிர்க்க சரியான காரணம் இல்லாததால் அவர்கள் (தி.மு.க. எம்.பி.க்கள்) உண்மைக்கு எதிராக மட்டுமே பேசுகின்றனர். தி.மு.க. எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டு மற்றவர்களை திசைதிருப்புகின்றனர். நடப்பு நிதியாண்டு நிறைவடைவதற்கு இன்னும் சில நாட்கள்தான் உள்ளது. பிஎம்ஸ்ரீ திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கான கல்வி நிதியை வழங்குவதில் மத்திய அரசுக்கு எந்த சிக்கலும் இல்லை. ஆனால், அதை பெற தமிழ்நாடு அரசுக்கு அக்கரையில்லை. பிஎம்ஸ்ரீ திட்டத்தில் சேர விரும்பாத மாநிலங்கள் அந்த திட்டத்தில் சேர வேண்டும். இத்திட்டம் அனைவருக்குமானது. தேசிய கல்விக்கொள்கையில் தி.மு.க. அரசியல் செய்கிறது' என்றார்.