
லக்னோ,
கனடா, அமெரிக்காவில் காலிஸ்தான் ஆதரவு அமைப்பான சீக்கியர்களுக்கான நீதி என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பை குர்பெத்வந்த் சிங் பனு என்பவர் தொடங்கியுள்ளார். இந்த அமைப்பை பயங்கரவாத இயக்கமாக அறிவித்துள்ள இந்தியா குர்பெத்வந்த் சிங் பனுவையும் பயங்கரவாதியாக அறிவித்துள்ளது. காலிஸ்தான் பயங்கரவாதியான குர்பெத்வந்த் சிங் பனு தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார்.
இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன் கனடாவில் இந்து மத வழிபாட்டு தலம் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர்.
இந்நிலையில், இந்த தாக்குதல் தொடர்பாக வீடியோ வெளியிட்ட காலிஸ்தான் பயங்கரவாதி குர்பெத்வந்த் சிங் பனு இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள இந்து மத வழிபாட்டு தலமான கடவுள் ராமர் கோவில் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வரும் 16 மற்றும் 17ம் தேதிகளில் அயோத்தி ராமர் கோவில் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். இதையடுத்து, அயோத்தி ராமர் கோவிலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அயோத்தி ராமர் கோவிலில் வரும் 18ம் தேதி ராம் விவாக் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் உ.பி. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பங்கேற்க உள்ளார். இந்த சூழ்நிலையில் அயோத்தி ராமர் கோவில் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று காலிஸ்தான் பயங்கரவாதி மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.