பெரம்பூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி மாலிவாக்கம் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த ராஜேஷ் – நிர்மலா தம்பதியின் 4 வயது மகன் ரோஹத்துக்கு கடந்த 2 நாட்களாக காய்ச்சல் இருந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை சென்னை அயனாவரத்தில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் மருத்துவமனையில் ரோஹத்தை அவரது பெற்றோர்கள் உள்நோயாளியாக அனுமதித்துள்ளனர்.
நேற்று முன்தினம் மாலை சிகிச்சையில் இருந்த சிறுவனுக்கு மருந்து கலந்து குளுக்கோஸ் போடப்பட்டுள்ளது திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு சிறிது நேரத்தில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அறிந்த சிறுவனின் உறவினர்கள் மருத்துவமனை முன்பு ஒன்று கூடி மருத்துவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் சிறுவனுக்கு பயிற்சி மருத்துவர் வீடியோ கால் மூலம் சிகிச்சை அளித்ததாகவும் தரமான மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கவில்லை எனவும் தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுவனின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மருத்துவமனை முன்பு சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த அயனாவரம் உதவி கமிஷனர் முத்துக்குமார் தலைமையிலான போலீசார் சிறுவனின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போக செய்தனர். போலீசார் மருத்துவமனை நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், சிறுவனின் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சிறுவனின் பெற்றோர்கள் குற்றம்சாட்டினர்.
The post அயனாவரம் தனியார் மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற 4 வயது சிறுவன் உயிரிழப்பு appeared first on Dinakaran.