அம்ரூத் குடிநீர் திட்ட குழாய் பதிப்பில் குளறுபடி

13 hours ago 2

*வீணாகும் தண்ணீர்

பள்ளிபாளையம் : பள்ளிபாளையம் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளிலும் பழைய குடிநீர் குழாய்களை அகற்றி விட்டு, புதிதாக குழாய்கள் பதிக்கும் அம்ரூத் குடிநீர் திட்டம், கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. குறைவான ஆட்களை வைத்து மேற்கொள்ளப் படுவதால் இந்த திட்டத்தை, திட்டமிட்ட காலத்திற்குள் நிறைவேற்ற முடியவில்லை. தற்போது அக்கரஹாரம் பகுதியில் குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

ஆனால் போதிய ஆழம் தோண்டாமல் பதிக்கப்பட்ட குழாய்கள், ஆங்காங்கே உடைந்து தண்ணீர் வெளியேறி வீணாகி வருகிறது. பள்ளிபாளையம் மஜித் பகுதியில் குடிநீர் குழாய்களுக்கு மூடி போடாததால், தினமும் பல்லாயிரம் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வீணாகி வருகிறது.

கோடையில் ஆற்றில் கிடைக்கும் குறைவான நீரை மின்மோட்டார் மூலம் உறிஞ்சி, சுத்தப்படுத்தி குழாய்கள் மூலம் மக்களுக்கு வழங்கும் நிலையில், அம்ரூத் திட்ட ஒப்பந்ததாரரின் அலட்சியத்தால், இப்படி குடிநீர் வீணாகிறது. ஒன்றிய அரசின் திட்டமான இந்த திட்டத்திற்கு பணியாளர்களை அதிகப்படுத்தி, குழாய் பதிப்பு பணியை விரைந்து முடிக்க தேவையான நடவடிக்கையினை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

The post அம்ரூத் குடிநீர் திட்ட குழாய் பதிப்பில் குளறுபடி appeared first on Dinakaran.

Read Entire Article