
கும்பகோணம்,
கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
கும்பகோணத்தில் அம்பேத்கர் உருவப்படத்தை வைத்து மரியாதை செலுத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறது. அம்பேத்கர் தேசிய தலைவர். அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் அல்ல. அவருடைய சிலைக்கு பா.ஜனதா, இந்து மக்கள் கட்சி மற்றும் இந்து அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி எதிர்ப்பு தெரிவிப்பதால், போலீஸ் தடை விதிப்பது என்பது வேதனையான விஷயமாகும்.
அமைச்சர் பொன்முடி, தவறாக பேசியதற்கு, அவருடைய கட்சி பதவியை மட்டும் பறித்தது கண்துடைப்பு நடவடிக்கை. பேசிய பிறகு அவருடைய மன்னிப்பு யாருக்கும் தேவையில்லை. அவரைக் கைது செய்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சட்டவிரோதமாக மதப்பிரசாரம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அண்ணாமலை தமிழக பா.ஜனதா கட்சியின் அடையாளமாக திகழ்கிறார். புதிய மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலையுடன் இணைந்து செயல்பட்டு திராவிட மாடல் ஆட்சியை அகற்ற வேண்டும். அவர்களுக்கு எங்களுடைய ஆதரவை தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.