வாஷிங்டன்: அமெரிக்காவில் விற்பனையாகும் மொத்த ஐபோன்களையும் இந்தியாவில் தயாரிக்க ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஐபோன் தயாரிக்கும் பணிகளை சீனாவில் இருந்து விரைந்து இந்தியாவுக்கு கொண்டுவரவும் ஆப்பிள் முடிவு செய்துள்ளது. உலகில் ஆப்பிள் விற்கும் 23.21 கோடி ஐபோன்களில் 28% அதாவது 6.5 கோடி ஐபோன்கள் அமெரிக்காவில் விற்பனை செய்யப்படுகிறது. சீனாவில் உள்ள ஃபாக்ஸ்கான் ஆலையில் இருந்து பெருமளவு ஐபோன்களை ஆப்பிள் நிறுவனம் தயாரித்து பெற்று வருகிறது. 2026க்குள் அமெரிக்காவுக்கான ஐபோன்கள் தயாரிக்கும் பணிகளை இந்தியாவுக்கு மாற்ற ஆப்பிள் திட்டமிட்டது. இந்தியாவில் டாடா, ஃபாக்ஸ்கான் நிறுவனங்களிடம் ஐபோன் தயாரிப்பு பணிகளை ஆப்பிள் தந்துள்ளது. டாடா எலக்ட்ரானிக்ஸ், ஃபாக்ஸ்கான் ஆலைகளில் ஐபோன் தயாரிப்பு திறனை 2 மடங்காக அதிகரிக்கவும் ஆப்பிள் முடிவு செய்துள்ளது.
ஐபோன் தயாரிப்பு – இந்தியாவுக்கு மாற்றப்படுவது ஏன்?
சீனா அமெரிக்கா வர்த்தகப் போரால் ஐபோன்கள் தயாரிக்கும் பணியை இந்தியாவுக்கு மாற்ற ஆப்பிள் தீவிரம் காட்டி வருகிறது. அமெரிக்காவுக்கு சீனா ஏற்றுமதி செய்யும் பொருட்கள் மீது 145% வரி விதிப்பதாக டிரம்ப் அறிவித்திருந்தார். பின்னர் அமெரிக்காவுக்கு சீனா ஏற்றுமதி செய்யும் ஐபோன்களுக்கு டிரம்ப் வரியில் இருந்து விலக்களித்தார். எனினும் சீனா ஏற்றுமதி செய்யும் மின்னணு சாதனங்கள் மீது விதிக்கப்படும் 20% வரி தொடரும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. வரியால் சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யும் ஐபோன்கள் விலை அதிகரிக்கப்படும். ஐபோன் விலை அதிகரிப்பதை தவிர்க்க அவற்றை இந்திய நிறுவனங்கள் மூலம் தயாரித்து பெற ஆப்பிள் முடிவு செய்துள்ளது.
The post அமெரிக்காவில் விற்பனையாகும் மொத்த ஐபோன்களையும் இந்தியாவில் தயாரிக்க ஆப்பிள் திட்டம்..!! appeared first on Dinakaran.