
மும்பை,
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி விட்டது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து இந்தியாவின் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் சாம்சன் களம் இறங்கினர்.
இதில் சாம்சன் 16 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து திலக் வர்மா களம் இறங்கினார். மறுபுறம் சிக்சர் மழை பொழிந்த அபிஷேக் சர்மா 37 பந்தில் சதம் அடித்து அசத்தினார். இதற்கிடையில் திலக் வர்மா 24 ரன்னிலும், அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 2 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து ஷிவம் துபே களம் இறங்கினார்.
அபிஷேக் சர்மா - துபே இணையும் அதிரடியில் மிரட்டியது. இதில் ஷிவம் துபே 13 பந்தில் 32 ரன் எடுத்து அவுட் ஆனார். அடுத்து களம் இறங்கிய ஹர்த்திக் பாண்ட்யா 9 ரன்னிலும், ரிங்கு சிங் 9 ரன்னிலும் அவுட் ஆகினர். தொடர்ந்து அக்சர் படேல் களம் இறங்கினார். மறுபுறம் அதிரடியில் மிரட்டிய அபிஷேக் சர்மா 135 ரன்களில் அவுட் ஆனார்.
இறுதியில் இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 247 ரன்கள் குவித்தது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 135 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 248 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து ஆட உள்ளது.