சென்னை: அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையே மோதல் போக்கு உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், பா.ம.க., இளைஞர் சங்கத் தலைவர் பதவியில் இருந்து முகுந்தன் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு இருக்கும் நிலையில் திமுக, அதிமுக கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. ஆனால் பாமக கட்சியிலோ உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. இளைஞர் அணி தலைவர் பதவி விவகாரம் தொடர்பாகத்தான் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் வலுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.
இதற்கிடையே இன்று செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். தலைமை பண்பு இல்லை, தாயை அடிக்க வந்தார் என பல்வேறு பரபரப்பான குற்றச்சாட்டுகளை ராமதாஸ் சுமத்தி இருக்கும் நிலையில் கட்சியினர் இடையே ஒருவித குழப்பம் ஏற்பட்டிருக்கிறது.
இந்நிலையில், பா.ம.க.,வின் இளைஞர் சங்கத் தலைவர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்வதாக முகுந்தன் பரசுராமன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; பா.ம.க., இளைஞரணியான பாட்டாளி இளைஞர் சங்கத்தின் தலைவராக கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் 28ம் தேதி முதல் நியமிக்கப்பட்டேன். சொந்த காரணங்களுக்காக அந்தப் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்கிறேன். மருத்துவர் அய்யா தான் என்றென்றும் எனது குலதெய்வம். மருத்துவர் அன்புமணி ஆகிய தாங்கள் தான் எங்கள் எதிர்காலம் என்ற உணர்வுடன் தொடர்ந்து கட்சிப் பணியாற்றுவேன் என்று உறுதியளிக்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
The post அன்புமணி – ராமதாஸ் மோதல்: பா.ம.க. இளைஞர் சங்கத் தலைவர் பொறுப்பில் இருந்து முகுந்தன் ராஜினாமா..!! appeared first on Dinakaran.