கோவை, மே 14: கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நிலங்களை சப் டிவிசன் செய்வது, மனை இடங்களை அளவீடு செய்வது தொடர்பான விண்ணப்ப மனுக்கள் அதிகரித்து வருகிறது. கடந்த காலங்களில் மாதம் சுமார் 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்தது. இப்போது மாதம் 11 ஆயிரம் முதல் 12 ஆயிரம் விண்ணப்பங்கள் குவிகிறது. இந்த விண்ணப்பங்களை தாலூகா அளவில் சர்வே பிரிவினர் கவனித்து நிலங்களை அளவீடு செய்து தருகின்றனர். 30 நாளில் முடிக்க வேண்டிய பணிகள் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருவதாக தெரிகிறது. மாநில அளவில் வேறு எந்த மாவட்டங்களிலும் இல்லாத அளவிற்கு கோவையில்தான் அதிக சர்வேயர்கள் பணியாற்றி வருகின்றனர்.
60 சர்வேயர்கள் மற்றும் 50 தற்காலிக சர்வேயர்கள் பணியில் இருக்கின்றனர். 15 நாளில் விண்ணப்பங்களை கவனித்து நிலங்களை அளவீடு செய்து பணிகளை முடிக்க முடியும். ஆனால் விண்ணப்பங்கள் எதிர்பார்த்த அளவை காட்டிலும் கூடுதலாகி கொண்டே இருப்பதால் சர்வே துறையினர் தவிப்படைந்துள்ளனர். நில வகை பயன்பாடு அறிவது, நிலங்களை அளவீடு செய்வது என சர்வே பிரிவினருக்கான பணிகள் அதிகமாகி வருகிறது. அரசு துறை சார்பில் நிலம் எடுப்பது, பல்வேறு திட்ட பணிகளுக்கு நிலங்களை சர்வே செய்வது என கூடுதல் பணிகளாலும் சர்வேயர்கள் இலக்கு காலத்திற்குள் பணிகளை முடிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.
சர்வே பிரிவினர் கூறுகையில், ‘‘மாவட்ட அளவில் விரைவாக நிலங்களை சர்வே செய்ய டிஜிபிஎஸ் என்ற புவியியல் தகவல் அடிப்படையிலான நவீன கருவிகள் பெறப்பட்டிருக்கிறது. இந்த கருவிகள் இருந்தும் விண்ணப்பங்கள் அதிகரிப்பினால் வேகமாக பணிகளை முடிக்க முடியவில்லை. அனைத்து சர்வேயருக்கும் இந்த கருவிகள் கிடைத்தால் பணிகள் வேகமாக முடிக்க வாய்ப்புள்ளது. மாவட்ட அளவில் அரசு நிலங்கள் ஆன்லைன் மயமாகிவிட்டது. அ பதிவேடு, புல வரைபடம் உள்ளிட்ட விவரங்கள் ஆன்லைன் மயமாகி இருக்கிறது. தமிழ் நிலம் செயலி, வில்லேஜ் மாஸ்டர் போன்ற இணைய தளங்களிலும் நிலம் ெதாடர்பான துல்லிய விவரங்களை பெற வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. நிலங்களை சப் டிவிசன் செய்து பட்டா மாறுதல் பெற விண்ணப்பதாரர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். வரும் காலங்களில் மேலும் விண்ணப்பங்கள் அதிகமாகும் நிலைமை இருக்கிறது’’ என்றனர்.
The post அன்னாசிப்பழம் வரத்து அதிகரிப்பு; நிலம் அளக்க சர்வே பிரிவிற்கு விண்ணப்பங்கள் அதிகரிப்பு appeared first on Dinakaran.